பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நன்னித்திலத்தின் பூண னிந்து நலஞ்சார் பவளக் கலையுடுத்துச்
செந்நெற் பழனக் கழனிதொறும் திரையுலாவு கடற்சேர்ப்ப
புன்னைப் பொதும்பர் மகரத்தின் கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ

(கானல்வரி-37)

என்பன சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

கோவலன், ஊழினை அடக்குதற்குரிய வலிமையின்றி, பழக்கவழக்கங்களால் நொய்மைப் பட்டிருந்ததால், மாதவியின் பாடல், அவனை எளிதில் தாக்கியது; பாதிப்புக் குள்ளாக்கியது; ஊழின் வழி அவன் உந்திச் செலுத்தப்பட்டான். ஊழின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும் தறுகண் அவனிடத்தில் அப்போது இல்லை.

மாதவியின் கற்பனையில் ஐயம் கொள்கிறான். இந்த ஐயத்திற்குரிய பழைய ஊழ், கோவலனுக்கு உண்டு. ஓர் அரங்கில் மாதவி ஆடுகிறாள். பலர் அவளுடைய ஆடல் திறனைக் கண்டு மகிழ்கின்றனர்.

ஆனால் கோவலன் மட்டும் கலையை மறந்தான். மற்றவர்கள் மகிழ்வது பற்றியும் அவன் அழுக்காறு கொண்டான்; மாதவியின்பால் ஐயம் கொண்டான். இந்த ஐயம் முற்றிக் கானல் வரியில் வெளிப்படுகிறது.

கோவலன் தனிமகனாக வாழும் பொழுது நல்லூழை வளர்த்துக் கொண்டானில்லை. மாதவியுடன் கூடி வாழும் பொற்காலத்திலும்கூட அவன் நல்லூழைத் தேடி வளர்த்துக் கொண்டானில்லை. தான் வளர்த்துக் கொண்ட ஊழைச் சிந்தித்து மறு ஆய்வு செய்து மாற்றிக் கொள்ளும் பழக்கங்களும் உடையவனாக இல்லை. ஆதலால், ஊழின் வழியே செல்கிறான்.