பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இத்தகு சிறந்த நாட்டின் அரசன் நெடுஞ்செழியன். அவன் அரசுக் கட்டிலில் ஏறின காலம் தொட்டு, அறம் ஒன்றினையே அறிந்தவன்; நல்லனவே கேட்டுப் பழகியவன்; முறை செய்தே பழக்கப்பட்டவன். இப்பழக்கமாகிய ஊழ் அவனுடைய ஊனில், உயிரில் உணர்வாகக் கலந்து விட்டது.

அவன், இப்பழக்கத்தின் காரணமாக, நன்றல்லாதன நடக்கக் கூடும் என்ற சிந்தனையே இல்லாமல் போய்விட்டான். நாள்தோறும் நாடி முறை செய்தல் மன்னன் கடமை என்பதைப் பழக்கத்தால் மறந்துப் போயினான்.

உழுத சால் வழிச் செல்வது போல அவரவர் பழக்கங்களின் வழியாக மனம் செல்வது இயல்பாகிவிட்டது. சமுதாயச் சூழலில், நேற்றைய நன்மை இன்றைய தீமையாவதும், இன்றைய தீமை நாளை நன்மையாவதும் நடைபெறக் கூடியது என்பதை அவன் அறிந்தானில்லை.

இந்தச் சூழ்நிலையில், அத்தாணி மண்டபத்தில் நடந்த ஆடலை அனுபவித்த வகையில், அரசியின் ஊடல் வேறு தோன்றிவிட்டது. பாண்டியன், அரசப் பெருங் குடும்பத்தைச் சேர்ந்தவனானாலும் ஒழுக்க நெறியில் சிறந்திருந்தவன். காதல் மனைவியின் ஊடலைப் பொறாதவனாக ஊடல் தீர்க்கும் வேட்கையினால், கோப்பெருந்தேவியிடம் விரைந்து செல்கிறான்.

தவறு செய்யாத தன்னைத் தவறாக நினைத்துக் கொண்டு அரசி ஊடியிருக்கிறாளே என்ற கவலை அவனை வருத்தியிருக்கிறது. அதனால் ஊடல் தீர்க்கும் வேட்கை அவனுக்கு மிகுந்திருக்கிறது.

நற்பழக்கங்களால் செழித்த அவனுடைய நல்லூழ் எதிர்பாராத தீமைக் குறக்கீடுகளால், அலைப்புறுகிறது; அதனால் உறுதி பிறழ்கிறது.

இத்தருணத்தில், பொற்கொல்லன் அந்தப்புர வாயிற் படியில் அரசனைச் சந்திக்கிறான். காணாமற் போன