பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்த நிலை இன்று வரை தொடர்ந்து வருகிறது. அறிஞர் அண்ணா மட்டும் இன நலம் காப்பதில், இன மானம் போற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா தம்மை முற்றிலும் வெறுத்த தலைவர் பெரியாரைத் தலைவராகவே கடைசி வரையில் மதித்தார்; போற்றினார். அதுபோலவே பெருந்தலைவர் காமராசரை பொற்காப்பு என்று போற்றினார். அறிஞர் அண்ணா தமிழரில் யாரையும் பகைத்துக் கொண்டதில்லை; வெறுத்தது இல்லை; பழி தூற்றியதுமில்லை.

ஒரு இனம் வளர்ந்து நிலை பெற வேண்டுமாயின் இன உணர்வும், இன மானமும் தேவை. இன ஒருமையுள்ள இனத்தின் மொழி வளரும்; வாழும் தமிழினத்திற்கு இல்லாத இனமான உணர்வும், இன நலம் காக்கும் முயற்சியும் இன ஒருமைப்பாடும் என்று தோன்றும்? இளங்கோவடிகள் எண்ணம் என்று ஈடேறும்?