பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மனித வாழ்க்கையில் பெறும் பேறுகளில் சிறந்தது நட்பு. ‘செயற்கரிய யாவுள நட்பினது போல்’ என்று வள்ளுவம் கூறும். நட்பு, பழக்கத்தாலேயே வளரும்; பழக்கத்தாலேயே நிலைபெறும். ஆனால், குகன் போன்ற உத்தமர்களுக்கு நன்மை அடிப்படையில் நட்புத் தோன்றுகிறது. எல்லாம் வல்ல கடவுளே, நம்பியாரூரருடன் தோழமையுறவு கொண்டதை ஓர்க, நட்பில்லா வாழ்க்கை சுவையற்றதாகவும் இறுதிக் காலத்தில் பயனற்றதாகவும் போய்விடும். காட்டிற்கு வந்த இராமன், தோழமைத் தம்பியர் உறவுகளைத் திசைதோறும் வளர்த்துக் கொண்டு வலிமை பெற்றான்; அமைதி பெற்றான்; ஆறுதல் பெற்றான். குகனுக்கும் இராமனுக்கும் இடையில் வளர்ந்த நட்பு வழிப்பட்ட அன்பு இருதய சுத்தமானது; அர்ப்பணிப்புத் தன்மையுடையது. அவர்களுடைய நட்பு எல்லையற்றது–இன்றும் நட்புக்கு எடுத்துக்காட்டு குகன்தான் — இன்றுவரை வேறோர் உதாரணம் — சான்று கிடைக்கவில்லை.


கிட்கிந்தை அரசு


அடுத்து, இராமன் அடைந்த நாடு கிட்கிந்தை. இஃது ஒரு அரசு; வானர அரசு. வானர அரசு என்றாலும் ஒரு அரசுக்குரிய அமைப்பு. மந்திரி சபை முதலியன அமைந் திருந்ததாகக் கம்பன் கூறுகின்றான். சுக்கிரீவன் இரண்டு தடவை மந்திரி சபையைக் கூட்டி ஆலோசனை செய்ததாக இராமகாதை கூறுகிறது. முதல் மந்திரி சபைக் கூட்டம் இராம - இலக்குமணர்களைச் சந்திப்பது குறித்து நடந்தது. இக்கூட்டத்தில் இராம - இலக்குமணர்களைச் சந்திக்கும்படி சுக்கிரீவன் கேட்டுக் கொள்ளப்படுகிறான். இந்த மந்திரி சபை, சுக்கிரீவன் வாலியால் முடி பறிக்கப்பெற்று மலைக் குகைகளில் வாழ்ந்த போது கூடியது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.