பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

குயிலும்...சாரலும்

போகிறார்கள் என்றவுடனே குப்பன் நடுங்குகிறான். தங்கள் இருவரின் கதி என்ன ஆகும் என்று அஞ்சுகிறான்.

அவன் நடுக்கத்தைக் கண்டு வஞ்சி தெம்பூட்டுகிறாள். “இவ்வளவு பெரிய மலையை யாரால் பெயர்க்க முடியும் இது பொய்! நம்பாதீர்கள்” என்கிறாள்.

அவன் அச்சம் மாறுவதற்கு முன் தொடர்ந்து சொற்கள் காதில் விழுகின்றன. “இராமன் அருள் உண்டு. ஏன் தயங்குகிறாய்? உன்னால் வானுயரம் வளரமுடியுமே! தயங்காதே! ஓடிப்போய் மலையை எடுத்துவா”! என்று கட்டளையிடும் பேச்சுக் கேட்கிறது.

இதைக் கேட்டுக் குப்பன் பெரிதும் நடுங்குகிறான். மலை அசைவதுபோல் தோன்றுகிறது. எங்கோ பெயர்ந்து நகருவது போல் இருக்கிறது. உடல் வெடவெடவென்று நடுங்க அவன் வஞ்சியைப் பார்த்து

“இப்போது நாம் என்ன செய்வோம்? யாரோ இராமன் அருள் பெற்றவனாம். இவ்வளவு பெரிய மலையைப் பஞ்சு மூட்டையைத் தூக்குவது போல் தூக்குகின்றான். இனி இறங்கிச் சென்றி தப்பித்திடவும் நேரம் இல்லையே. பேசிப் பேசிப் பொழுதைக் கழித்து விட்டாயே! இதோ முத்தம் தருகிறேன் என்று சொல்லிச் சொல்லி நேரத்தைக் கடத்தி விட்டாயே! இப்போது மலையைத் தூக்கிச் சென்று கடலில் போடப் போகிறானே! நாம் எப்படித் தப்புவோம்! இனிப் பிழைக்க மாட்டோமே!’ என்று கலங்கித் தவிக்கிறான் குப்பன்.

குப்பன் எதையும் எளிதில் நம்பிவிடும் இயல்புள்ளவனாய் இருக்கிறான். எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாய் இருக்கிறான். வஞ்சியோ, எதையும் அமைதியாக ஆராய்ந்து