18
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
தன்னைத் தற்காத்துக் கொள்கிற ஆற்றலையும் நிறையவே உடற்கல்வி வளர்த்து விடுகிறது. நீடித்த சுகமான வாழ்வை வழங்குகிறது.
இப்படிப்பட்ட இனிய சூழ்நிலைகளையும் இதமான பண்புகளையும் உடற்கல்வி வளர்த்து விடுகிறது என்பது, உலகறிந்த உண்மை. இதனை உலகம் பின்பற்றி மகிழ்வதும் உண்மை தான்.
இதற்காக, உடற்கல்வி, பல விதமான முறைகளைக் கையாளுகிறது.
உடற்கல்வியை நாம் பிரித்துப் பாாக்கிற போது, அது உடற்பயிற்சி, விளையாட்டு என்று பிரிந்தே வினையாற்றுகிறது.
உடற்பயிற்சி, என்பது உடல் உறுப்புக்களை ஒருங்கிணைத்து செயல்பட வைத்து, உடல் அமைப்பில் வலிமையையும் , உடல் ஆற்றலில் சிறப்பான தன்மைகளையும் கொழிக்க வைக்கிறது.
விளையாட்டு என்பது, பங்கு பெறுகிற ஒவ்வொருவரும் தனக்குரிய திறமைகளைத் தெரிந்து கொள்ளவும், மற்றவர்களது திறமைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்திபட்டுக்கொள்ளவும் , அதையே போட்டியிட்டு விளையாடி பொழுதைப் பயனுள்ளதாகப் போக்கவும், பயன்களைச் சேர்க்கவும், மகிழ்ச்சியில் திளைக்கவும், செய்து விடுகிறது.