பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

கொண்டே தாழிவயிறனை அணுகினான். மற்றவர்களும் மௌனமாகப் பின்னால் வந்தனர்.

வேறொரு பரிசலில் யாரோ வந்து உணவு தந்துவிட்டுப் போனதாகத் தெரிந்தது. உணவு கிடைத்ததைப்பற்றி அனைவருக்கும் மகிழ்ச்சிதான். கவலையை மறந்துவிட்டு மூவரும் உணவில் நாட்டம் செலுத்தினர். ஜின்காவிற்கு வேண்டியதைக் கொடுக்கத் தங்கமணி மறந்துவிடவில்லை.

"இந்தச் சோறெல்லாம் ஒரு வேளைக்கு எனக்கே பத்தாது. இதையே ராத்திரிக்கும் உங்களுக்கு வைத்திருந்து கொடுக்க வேணுமாம்," என்று கடுகடுப்பாகப் பேசினான் தாழிவயிறன்.

தங்கமணிக்கு நல்ல சமயம் வாய்த்தது. “இந்தாப்பா, கவலைப்படாதே. இங்கே தேங்காய் நிறைய காய்த்துத் தொங்குகிறது. வேண்டிய மட்டும் சாப்பிடலாம்" என்று அன்போடு பேசினான்.

“அட போ, அந்த மரத்திலே என்னால் ஏற முடியாது. முன்னெல்லாம் ஒரு நொடியிலே ஏறிடுவேன். இப்போ மரத்தைக் கட்டிப் பிடிக்கவே முடியறதில்லை” என்று கவலைப் பட்டான் தாழிவயிறன்.

“ஆமாம், உன்னால் எப்படி ஏற முடியும்? வயிறு தடுக்குமே!" என்று சுந்தரம் கிண்டலாகப் பேசினான்.

"நீ ஒண்ணும் ஏற வேண்டாம். நான் உனக்குத் தேங்காய் போட்டுத் தருகிறேன்" என்று தங்கமணி சொல்லி விட்டு அவன் ஜின்காவிற்குச் சமிக்கை செய்தான்.

ஜின்கா அதிவிரைவில் மரத்தில் தாவியேறித் தேங்காய்களைப் பறித்துப் போட்டது. தாழிவயிறனுக்குச் சொல்ல முடியாத பூரிப்பு. பொழுது சாயும் வரையில் தேங்காய்களை உடைத்துத் தின்றுகொண்டே இருந்தான்.

தாழிவயிறன் தேங்காயிலே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தபோது தங்கமணி தனது திட்டத்தை நிறை வேற்றுவதற்கான செயல்களில் ஈடுபட்டான். “சுந்தரம், உனது கத்தி எங்கே? அதைக் கொண்டு ரயில் கற்றாழையில் பெரிய மடலாக ஒன்றை வெட்டி வா" என்று அவன் சொன்னான். எதற்காகக் கற்றாழை மடல் என்று தெரியாவிட்டாலும் சுந்தரம் உடனே அதை வெட்டி எடுத்து வந்தான்.