பக்கம்:கோவூர் கிழார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

மன்னன் புகழ் பெறுவதோடு அவனுடைய குடி மக்களும் அமைதி பெற்று வாழ்வார்கள் என்பதை வற்புறுத்திக் கூறி வந்தார்.

ஒருநாள் நெடுங்கிள்ளி படை திரட்டுகிறானென்றும், இழிவாகப் பேசுகிறானென்றும் ஓர் ஒற்றன் செய்தி கொண்டு வந்தான். அதைக்கேட்டு நலங்கிள்ளி சிங்கம்போலத் துள்ளிக் குதித்தான். கோபம் மூண்டது; சிரித்தான்; கோபத்திலும் சிரிப்பு வரும் அல்லவா? “பைத்தியக்காரன்! இவன் சோழ குலத்தில் உதித்தமையால் சோழப் பேரரசுக்கே உரியவனாகி விடுவானோ? மூத்த மகனுக்கே அரசு உரியது என்ற மரபு உலகம் அறிந்தது. அதை எண்ணாமல் இவன் தருக்கி நிற்கிறானே! ‘நான் சோழ குலத்திற் பிறந்தவன். எனக்கு அரசுரிமை வேண்டும். ஏதேனும் நிலப்பகுதி வேண்டும்’ என்று என்னிடம் வந்து கேட்கட்டும். இந்த அரசையே தந்து விடுகிறேன். ஆனால் என்னுடைய ஆண்மையை, என்னுடைய ஊக்கத்தை இழித்துப் பேசும் முட்டாளுக்கு நான் அஞ்சுவேனா? இருந்த இடத்திலேயே அடங்கிக் கிடந்தானானால் பிழைப்பான். என்னுடன் போருக்கு வந்தானானால் தொலைந்தான். சோழ நாடு வலியில்லார் நிறைந்த நாடு அன்று. போர் எங்கே வரப்போகிறது என்று தினவு கொண்ட தோள் உடையவர்களாகப் பல வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு வார்த்தை சொல்லவேண்டியதுதான்; அவர்கள் புறப்பட்டுவிடுவார்கள். வளைக்குள் புகுந்து கொண்டிருக்கும் எலியைப் போல இருக்கிறான் அவன். அங்கே புகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/16&oldid=1089699" இலிருந்து மீள்விக்கப்பட்டது