பக்கம்:கோவூர் கிழார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

சோழன் நலங்கிள்ளியோடு இருந்து அவனுடைய அன்பை முழுமையாகப் பெற்ற கோவூர் கிழாருக்கு அவன் இல்லாத உறையூரில் தங்க விருப்பம் இல்லை. பல ஆண்டுகள் அவனுடன் ஒன்றி வாழ்ந்தவர் அவர்; அவனால் தெய்வம் போலக் கொண்டாடப் பெற்றவர் அல்லவா?

ஆயினும் கிள்ளிவளவன் அழைக்காமலே அவனை நாடிச் செல்ல வேண்டிய சமயம் ஒன்று வந்தது. யாருக்கேனும் தீங்கு நேர இருந்தால் அந்தத் தீங்கை மாற்ற முற்படும் பெரியார் கோவூர் கிழார். பகைமை பூண்டவர்களிடையே சந்து செய்விப்பதில் வல்லவர். தம்முடைய சொல்லாற்றலாலும் கவியாற்றலாலும் மன்னர்கள் செய்யப் புகுந்த தவறான செயல்களை மாற்றும் சான்றோர் அவர். நெடுங்கிள்ளி ஒரு புலவனை ஒற்றனென்று எண்ணிக் கொல்ல நினைந்தபோது அவனிடம் முறையிட்டுப் புலவனை யமன் வாயிலிருந்து மீட்ட செய்தி நமக்குத் தெரியும். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே இருந்த பகையை மாற்றி நன்மை செய்ததையும் பார்த்தோம். அப்படிச் செய்தமையால் சோழ நாட்டில் அமைதி உண்டாயிற்று நாட்டு வளம் பெருகியது. அது போலவே இப்பொழுதும் ஒரு பெரிய நன்மையைச் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்தது. நடக்க இருக்கும் தீமையைத் தடுப்பதும் ஒரு வகையில் நன்மை செய்வதே அல்லவா?

புலவர்களின் பாராட்டுக்கு உரிய வள்ளல்கள் ஏழு பேர் தமிழ் நாட்டில் வாழ்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/76&oldid=1111112" இலிருந்து மீள்விக்கப்பட்டது