பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

இயக்குவதும் அவற்றோடு கூடி இயங்குவதும் செய்வன: அவ்வியக்கத்தால் அவற்றிடையே வினைகள் தோன்றி நிலவுகின்றன. வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது. நினையுங்காலைக் காலமொடு தோன்றும்” என்று நூலோர் கூறுகின்றனர். செய்யும் தொழிலுக்கேற்ப ஊதியமும் உறையுளும் அமைவது போலச் செய்யும் வினைக் கேற்ப உயிர்கட்கு நுகர்ச்சியும் உடம்பும் அமைகின்றன. உடம்பையும் நுகர்பொருளையும் படைத்து அளிக்கும் வகையில் முதற் பொருளாகிய கடவுள் மேன்மையுற்று விளங்குகிறார். இதனால் கடவுட்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு படைப்போனுக்கும் படைக்கப்படுபொருட்கும் உள்ள தொடர்பாய்க் கடவுளை உலகைத் தனக்குரியதாகக் கொண்ட உடையவனாகவும், உலகம் அவனது உடைமையாகவும் நிறுத்துகிறது. உயிர்கள் உலகிடைத் தோன்றும் உடம்பை இடமாகக் கொண்டு வினை (தொழில்) செய்து பயன் பெறுவதால் இல்வுலகம் உயிர்களின் பொருட்டே படைக்கப்பட்டு அவற்றிற்கு உதவப்பட்டிருப்பது என்பது பழந்தமிழர் சமயக் கொள்கை. இதனால் கடவுட் பொருட்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பு உதவி செய்வோனுக்கும் உதவி செய்யப்பட்டோர்க்கும் உள்ள தொடர்பாய், உதவி பெற்றோன் உதவி செய்தோனுக்குக் கடமைப்பட்டு அவன் நன்றியினை நினைந்தொழுகுவது போல உயிர்கள் கடவுளது அருளை நினைந்து வழிபட்டொழுகுவது கடனாகும் என்பதை வற்புறுத்துகிறது. இதனால்தான் தொல்காப்பியனார் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குச் சிறப்பாக இலக்கணம் வகுத்துக் காட்டியுள்ளார்.

உயிர் வகையுள் மக்களைத் தனிப்பட நிறுத்தி உயர்திணை உயிர் என்றும், ஏனை உயிர் வகையை அஃறிணையுயிர் எனவும்