பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ் இன்பம்


பாராட்டினர் என்பது புலனாகும். "தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்” என்பது அவனது சிறப்புப் பெயராக விளங்கிற்று.

குறுநில மன்னர்

புறநானூற்றிலே புகழப்படுகின்ற குறுநில மன்னரிற்பலர், குன்று சார்ந்த நாடுகளில் வாழ்ந்தனரெனத் தெரிகின்றது. பாண்டிநாட்டில், பழனிமலையை ஆண்ட தலைவன் பேகன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, கோடை மலையை ஆண்டவன் கடிய நெடு வேட்டுவன்; பொதிய மலையை ஆண்டவன் ஆய் அண்டிரன். சோழ நாட்டில், வல்வில் ஒரி என்பவன் கொல்லிமலையை ஆண்டான்; அதிகமான் குதிரை மலையில் ஆட்சி புரிந்தான்; குமணன் முதிர் மலையின் கொற்றவன்; பெருநள்ளி என்பவன் தோட்டிமலையின் தலைவன். இச்சிற்றரசரிற் சிலர், பேரரசரினும் சாலப் புகழ்பெற்று விளங்கினர்; வறிஞரை ஆதரித்தனர்; அறிஞரைப் போற்றினர். பாண்டி நாட்டிலுள்ள பறம்பு மலையையும், அதை அடுத்த முந்நூறு ஊர்களையும் ஆண்டு வந்தான் பாரி. அவன் மனத்தில் அமைந்த அருளுக்குக் கங்கு கரையில்லை. அவன் நாவில், இல்லையென்ற சொல்லே இல்லை. பாரியின் பெருந்தகைமையைப் பொய்யறியாக் கபிலர் புகழ்ந்து போற்றினார்.

பொதியமலைத் தலைவனாய் விளங்கிய ஆய் என்பவன் மற்றொரு வள்ளல். வறுமையால் வாடி வந்தடைபவரைத் தாயினும் சாலப் பரிந்து ஆதரித்த ஆயின் பெருமையைப் புறநானூற்றால் அறியலாம்.

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்”