பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


பழவினை என்று ஒன்று இருக்குமா? இருந்தாலும் அது உணர்வு, அறிவு முதலிய வேறு பலவற்றிற்கும் இருக்கலாமே தவிர, ஓயாது உருண்டு ஓடிக்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும் பொருளுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? சிந்தித்துப் பார்!

அவ்வியான் பெற்ற ஆக்கம் உண்மையிலேயே ஆக்கந்தானா? செவ்வியான் பெற்ற கேடும் உண்மையிலேயே கேடுதானா? சிந்தித்துப் பார்!

பொறாமைக் குணமுடைய அவ்வியன் தான் பெற்ற செல்வத்தை ஒரு செல்வமாகவே கருதமாட்டானே! கருதினால், அவன் அவ்வியனாக இருக்கமாட்டானே! அவனே தன் செல்வத்தை ஆக்கம் என்று கருதாத போது, நீ கருதுவது எப்படி? சிந்தித்துப் பார்?

பொறுமையுள்ளம் படைத்த செவ்வியன் தான் அடைந்த துன்பத்தை ஒரு துன்பமாகவே கருத மாட்டானே! கருதினால், அவன் செவ்வியனாக இருக்க மாட்டானே! அவனே அதைக் கேடு என்றும், துன்பம் என்றும் கருதாதபோது, நீ கருதுவது எப்படி? சிந்தித்துப் பார்!

ஆக்கம் அடைந்துள்ள அவன் அவ்வியன்தானா? கேடு அடைந்துள்ள அவன் செவ்வியன்தானா? அவனே அப்படிக் கருதுகின்றனா? நீ அப்படி நினைக்கிறாயா? சிந்தித்துப் பார்!

உள்ளபடியே அவ்வியரில் ஆக்கம் அடைபவரும், செவ்வியரில் கேடு அடைபவரும் எங்கேனும் ஒருவர் இருவர் இருப்பாரா? எல்லோருமே அப்படித்தானா? சிந்தித்துப் பார்!