பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


அது மட்டுமல்ல. “நீ கண்ணாற் காண்கின்ற ஆக்கத் தினையும், கேட்டினையும் ஆக்கம் என்றும், கேடு என்றும் கருதிவிடாதே! இவை நினைக்க-நினைத்துப் பார்க்கக் கெடும்-இல்லாமற் போய்விடும்” என்பதும் இதன் மற்றொரு பொருளாகும்.

“இதுவா இக் குறளின் பொருள்? இதுதானா வள்ளுவரின் கருத்து” என்று ஐயப்படுவார்க்கும், இதனை அடுத்துள்ள குறள் வெளிப்படையாக விடை கூறிக் கொண்டிருக்கிறது. அது,

“அவ்வித்து அகன்றாரும் இல்லை, அஃதில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்” என்பது. இதன் பொருள், “பொறாமை கொண்டவர் வாழ்ந்தது மில்லை; அஃதில்லாதவர் கெட்டது மில்லை” என்பதே. இதுவும் நினைக்கப்படும். நினைத்துப் பார்த்தால் விளங்கும்.

படித்தீர்களா? நினைத்துப் பார்த்தீர்களா? பொருள் நன்றாய் விளங்கிற்றா? இன்னும் ஒருமுறை படியுங்கள், இக்குறளை.

       "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
        கேடும் நினைக்கப் படும்."

எப்படிக் குறள்? எத்தகையர் வள்ளுவர்? எப்படி அவரது நினைவு உள்ளம்? இந்த ஒரு குறளே உங்களின் கோணிய நெஞ்சை நிமிர்ந்த நெஞ்சாக ஆக்கப் பயன்படுமானால், பிற குறள்கள் என்னென்ன பயனைத் தரும்? எண்ணிப் பாருங்கள்! எடுங்கள் குறளை படியுங்கள் நன்றாக! மேற்போக்காக அல்ல, ஊன்றிப் படியுங்கள்; உண்மை விளங்கும். வாழ்வும் வளம் பெறும். ஏனெனில் குறள் ஒரு வாழ்வு நூல்!

வாழ்க வள்ளுவர்!
வளர்க குறள்நெறி!