41
கூறுமாறு சத்தையும் அசத்தையும் சார்ந்து சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் உயிர்.
முற்றுணர்வுடையதாய் என்றும் உள்ள மெய்ப்பொருளாகிய சிவத்துக்குப் பாசத்தைப் பொருந்தி அறிந்து இவை பொய்யென்று நீங்கவேண்டிய இன்றியமையாமையில்லை . அசத்தாகிய பாசமோ அறிவில்லாத சடம் ஆதலால் எதனையும் அறியக்கூடியதன்று. ஆகவே அந்நிலைமைக்கண் சத்தாகிய சிவம், அசத்தாகிய பாசம் ஆகிய இவ்விருதிறப் பொருள்களி லும் அழுந்தி அறியுந்தன்மையது, சத்தும் அசத்தும் அல்லாத சதசத்தாகிய ஆன்மாவேயாகும் என்றவாறு.
மாற்றம் மனங்கழிய நின்ற சிவத்தின் திருமுன் சுட்டி யறியப்படும் உருவினவாகிய அசத்தாகிய சடப்பொருள்கள் யாவும் தம் தன்மை விளங்க முனைத்துத் தோன்றுதலின்றி வெறும் பாழாய் மறையுந்தன்மைய ஆதலால், சத்தாகிய சிவம் அசத்தாகிய பாசத்தை அறிந்து, அநுபவியாது, அசத்தாகிய பாசம் அறிவில்லாதது ஆதலால் சத்தாகிய சிவத்தை அறிந்து அனுபவியாது. ஆதலால் சத்து அசத்து என்னும் இவ்விரண்டின்கண் நின்று இவ்விரண்டினாலும் இவ்விரண்டின் திறனையும் அறியும் அறிவுளதாகிய பொருளொன்று உளதென்பது ஒழிந்து நின்றதனால் உணர்தலென்னும் பாரிசேட அளவையாற் பெறப்படுதலின், அங்ஙனம் பெறப்படும் அதுவே சத்தாதற் றன்மையும் அசத்தாதற் றன்மையும் இன்றிச் சதசத்தாந் தன்மையினையுடைய ஆன்மா என்பதாம். ஆன்மாவுக்குரிய இவ்வியல்பினை,
"யாவையுஞ் சூனியம் சத்தெதிர் ஆகலின், சத்தே அறியாது; அசத்து இலது அறியாது; இருதிறன் அறிவுளது, இரண்டலா ஆன்மா"
எனவரும் சிவஞான போத ஏழாஞ் சூத்திரத்தில் ஆசிரியர் மெய்கண்டதேவர் தெளிவாக விளக்கியருளினார், அவரருளிய