திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்
125
‘பத்தியா யுணர்வோ ரருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா விருக்குந் தேவர்காள் இவர்தந்
திருவுரு விருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமா யதற்கோர்
வித்துமா யாரூ ராதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே’
எனவரும் திருவிசைப்பா இனிதுபுலப்படுத்தல் காண்க.
79. பொன்னிறங் கட்டியினும் பூணினு நின்றாற்போல்
அந்நிறம் அண்ணலும் அம்பிகையும்-செந்நிறத்தள்
எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும்
அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு.
இது, சத்தியும் சிவமும் பிரிவின்றியியைந்த ஒருபொருளே என்பதனை மற்றுமோர் உவமை காட்டி வலியுறுத்துகின்றது.
(இ-ள்) பொன்னின்கண் உள்ள நிறம், பொன் கட்டியாயிருந்த நிலைமையிலும் பொன்னாற் செய்யப்பெற்ற அணிகலனாயிருந்த நிலைமையிலும் ஒரே தன்மையாய்ப் பொருந்தி நின்றவாறு போலவே அத்தன்மையே சிவமும் சத்தியும் பொருந்தி நின்ற முறைமையாகும். பொன்னும் அதனிற் பிரிவிலா நிறமும் போன்று செம்பொருளாகிய சிவத்தின் ஆற்றலாகிய சிவசத்தி எவ்வுருவினளாகத் திகழ்கின்றாளோ எங்கள் சிவபெருமானும் அவ்வுருவினனாகவே ஆங்குத் தோன்றி யருள்வன் எ-று.
உருவ நிலைபெறாத கட்டிப்பொன்போலச் சிவமும், பொன்னிலிருந்து உருப்பெற்றுத் திகழும் அணிகலன் போலச் சத்தியும் முறையே முழுமையும் விரிவும் ஆகிய இருவேறு தன்மையுடைய ஒருபொருளே என்பது உணர்த்தியவாறு காண்க.
௩௬. நாலாய பூதமும் நாதமும் ஒன்றிடின்
நாலாம் நிலையாமென் றுந்தீபற
நாதற் கிடமதென் றுந்தீபற.
இது, சிவயோக நெறியின் சிறப்புணர்த்துகின்றது.
(இ-ள்) நிலமுதல் வானிறாகவுள்ள ஐம்பெரும்பூதங்களில் நாலாவது பூதமாகிய காற்றும் அதனால் உந்தப் பெறும் சூக்குமையாகிய வாக்கும் ஒன்றி நிற்கும் நிலையினைக் குருவருளால் அறிந்து மனத்தை