எல்லாம் வல்ல சிவபெருமான் சிவகாமியம்மை கண்டுகளிக்க ஞானமயமான தில்லைப்பொன்னம்பலத்திலே அற்புதத்தனிக் கூத்தினை ஆடியருளும் செயல் உலகத்தோற்றம் தொடங்கியது முதலே நிகழந்துவரும் தொன்மை வாய்ந்ததாகும்.
முருகன்
சூரபதுமனால் துயருற்ற தேவர்களைச் சிறைநீக்கி உய்வித்தல் வேண்டிச் சிவபெருமான் பால் விடைபெற்றுத் தாரகனை வதைத்து, கேதாரம், காசி, திருப்பருப்பதம் முதலிய தலங்களை வணங்கி,தென்னாட்டிற்கு எழுந்தருளிய முருகப்பெருமான்,பதஞ்சலிக்கும் புலிமுனிக்கும் ஆடல்காட்டியருளிய தில்லை மூதூரைக் கண்டு அங்கு உலகபுருடனுக்கு இதயகமலமாகத்திகழும் அம் மன்றத்திலே இறைவன் ஆடும் அற்புதத் தனிக்கூத்தினை வணங்கிச் சென்றார் என்பது,
"விரகனல் வேள்வி தன்னில் வியன்றலை அரிந்து வீட்டிப்
பொருவரு தவத்தை யாற்றும் பதஞ்சலி புலிக்கால் அண்ணல்
இருவரும் உணர்வாற் காண எல்லையில் அருளா வீசன்
திருநட வியற்கை காட்டுந் தில்லைமூ தூரைக் கண்டான்”.
“தண்டளிர்ச் சோலைத் தில்லை தபனிய மன்றி லென்றுந்
தொண்டையங் கனிவாய் மாது தொழச் சுராட் புருடன் உள்ளத்
தண்டரு மதிக்க லாற்ற அற்புதத் தனிக்கூத் தாடல்
கண்டன்ன கசிவால் உள்ளங் களிப்புற வணங்கிப் போனாள்".
என வரும் கந்தபுராணச் செய்யுட்களால் புலனாம்.
அருச்சுனன்
வடநாட்டிலிருந்து தீர்த்தயாத்திரையாகப்புறப்பட்ட அருச்சுனன்