பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71



"அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற்
சேந்தனார் செய்த செயல்"

எனவரும் திருக்களிற்றுப் படியாரில் உய்யவந்ததேவ நாயனாரும் - முறையே பரவிப் போற்றியுள்ளார்கள்.


ஐயடிகள் காடவர் கோன் நாயனார்

பல்லவர் மரபிலே தோன்றித் தொண்டை நாட்டையாண்ட வேந்தர் பெருமான் காடவர் கோன் என்பார் அரச பதவியை மைந்தரிடம் ஒப்படைத்துத் துறவு பூண்டு தில்லைச் சிற்றம்பலம் முதலிய ஒவ்வொரு திருக்கோயிலையும் ஒவ்வொரு வெண்பாவினாற் பாடிப் போற்றினார். ஐயடிகள் காடவர் கோன் நாயனார் பாடிய க்ஷேத்திரத் திருவெண்பாவின் முதற்பாடல்,

"ஓடுகின்ற நீர்மை யொழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று-நாடுகின்ற .
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்"

என்பதாகும்.

சேரமான் பெருமாள்

நம்பியாரூரார்க்குத் தோழராய்க் களையாவுடலோடு கயிலை சென்ற சேரமான் பெருமாள் நாயனார், தில்லைத் திருக்கூத்தினைக் கண்டு மகிழ்ந்த நிலையிற் பாடிப் பரவிய செந்தமிழ்ப் பனுவல் பொன்வண்ணத் தந்தாதி என்பதாகும். பொன்னார் மேனியனாகிய இறைவனைக் கண்டு காதலித்த தலைவியொருத்தி அவனையடையப் பெறாமையால் வருந்தித் தன்னுடம்பிற் பொன் போலும் பசலை நிறம் பரவத் தானும் தன் தலைவனும் பொன் வண்ணமாகிய உருவொப்புமை பெற்று விளங்கும் தன்மையினைக் கூறுவதாக அமைந்தது.