பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 111

வருமொழியும் என்று சொல்லப்பட்ட அவ்விரண் டியல்பினை யுடையவாம். எ-று.


(உ-ம்) ஆ + உண்டு - ஆவுண்டு (உயிரீற்றின் முன் உயிர்)

          ஆ + வலிது   -  ஆவலிது (உயிரீற்றின் முன்மெய்)
          ஆல் + இலை -  ஆலிலை (மெய்யீற்றின் முன் உயிர்) 
          ஆல் + வீழ்ந்தது - ஆல் வீழ்ந்தது (மெய்யீற்றின் முன் மெய்)


   நிலைமொழியை நிறுத்த சொல்லென்றும் வருமொழியைக் குறித்துவருகிளவி யென்றும் இச்சூத்திரத்துத் தொல்காப்பியனார் வழங்கியுள்ளமை காண்க. விளவினைக் குறைத்தான் என்றவழி, விள என்பதனைச் சார்ந்த இன்சாரியையும் ஐயுருபும் நிலை மொழியாயே நிற்குமென்பது நோக்கி அதனை நிறுத்த சொல்லென்றும் குறைத்தான் எனவரும் முடிக்கும் சொல்லைக் குறித்து வருகிளவி யென்றுங் கொள்ளுதல் ஆசிரியர் துணியாம்.
     அவற்றுள், 
     நிறுத்த சொல்லின் ஈறாகெழுத்தொடு 
     குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் 
     பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் 
     பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந் 
     தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் 
     தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் 
     மூன்றே திரிபிடன் ஒன்றே யியல்பென 
     ஆங்கந் நான்கே மொழிபுண ரியல்பே. (தொல். 108)

இது மேற்கூறும் புணர்ச்சி சொல்வகையான் நான்காமென்பதும், புணர்ச்சி வகையான் நான்காமென்பதும், புணர்வது எழுத்தும் எழுத்துமே யாவதன்றிச் சொல்லுஞ் சொல்லு மன்றென்பதும் உணர்த்துகின்றது.

   (இ-ள்) நிலைமொழி வருமொழி யெனப்பட்டவற்றுள் நிறுத்த சொல்லாகிய நிலைமொழியின் ஈறாகி நின்ற எழுத்தோடு குறித்துவரு சொல்லாகிய வருமொழியின் முதலெழுத்துப் பொருந்தப் பெயர்ச்சொல்லோடு பெயர்ச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் பெயர்ச்சொல்லொடு வினைச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் வினைச் சொல்லோடு பெயர்ச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் வினைச் சொல்லோடு வினைச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும்