பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

65



என்றற்றொடக்கத்து இலக்கியங்களில் இரு மாத்திரை யுடைய நெட்டெழுத்து ஓரசையாகவும், ஒரு மாத்திரையுடைய குற்றெழுத்து ஓரசையாகவும் பிரிந்து, அசைகொள்ளப் படுதல் பொருந்தாதாம். செய்யுளில் வரும் உயிரளபெடை நெடிலோசையும் குறிலோசையும் என வேறு பிரித்து அசைகொள்ளப்படுத லானும், நெடிலே மூன்று மாத்திரையின் மிக்கொலிக்குமென்றல், இரண்டு மாத்திரைக்கு மேல் மூன்று மாத்திரை முதலாக ஓரெழுத்தொலித்தலில்லை என்பதுபட “மூவளபிசைத்தல் ஒரெழுத்தின்றே, என ஆசிரியர் கூறிய சூத்திரக் கருத்தோடு முரணுதலானும், ‘குன்றிசை மொழிவயின் நெட்டெழுத்திம்பர் ஒத்த குற்றெழுத்து நின்று இசை நிறைக்கும்'என் புழி, இசை நிறைக்கும் என்னும் பயனிலைக்கு வினைமுதலாகிய குற்றெழுத்தினை வெறும் அறிகுறியென்றல் பொருந்தாமையானும் தொல்லாசிரியரின் விதியே அளபெடைக்கு அமையு மென்க.

ஐ ஒள வென்னு மாயீ ரெழுத்திற்
கிகர வுகர மிசைநிறை வாகும். (தொல், 42)

இஃது ஒத்த குற்றெழுத்தில்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது.

(இ-ள்) தமக்கு இனமில்லாத ஐகார ஒளகார மென்று கூறப்படும் அவ்விரண்டெழுத்திற்கும் முறையே ஈகார ஊகாரங்களுக் கினமான இகர உகரங்கள் குன்றிசை மொழிக்கண் நின்று ஒசையை நிறைப்பனவாம் (எ-று).

அளபெடைக்கண் இசைநிறைப்பன குற்றெழுத்துக்களே யென்பதை ஈண்டும் “இகர வுகரம் இசை நிறைவாகும்’-என்பதனால் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

“நெடில் அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே’ எனவுரைத்த பவணந்தியாரும், தம் கொள்கைக்கு மாறாகக் “குற்றுயிர் அளபின்ஈறாம்” எனக் கூறிப் போந்தார். ஒசையால் மொழிமுதல் மொழியிறு சொல்லும் இவ்விடத்தில் அளபெடையிற் குற்றெழுத்து ஈறாமெனக் கூறுதல் வெறுங் குறியளவிற்கென்றே கொள்ளற்கில்லை. இதனால் அளபெடையிற் குற்றெழுத்து ஒலித்து நிற்றலை நன்னூலாரும் தம் கொள்கையினை மறந்து உடன்பட்டனரெனவே கொள்ள வேண்டியுளது.

இதுவரையும் சொல்லப்பட்ட விதிகள் முன்னை இயலாகிய நூன்மரபிற் கூறியவற்றுடன் தொடர்புடையன