பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு அமைந்த எல்லாவுரைகளையுந் தொகுத்து உரைவிளக்கக்குறிப்புக்களோடும் ஆய்வுரையுடனும் வெளியிடும் பணியினை மேற்கொண்டுளது. தொல்காப்பியப் பொருளதி காரத்தின் முதலியலாகிய அகத்திணையியல் உரைவளம் வித்து வான் மு. அருணாசலம் பிள்ளையவர்கள் எழுதிய உரைவிளக்கத் தோடும் ஆய்வுரையுடனும் 1975-இல் வெளியிடப்பெற்றது. அதனைத் தொடர்ந்து புறத்திணையியல் உரை வளம் இப்பொழுது வெளியிடப்பெறுகின்றது.

இதன்கண் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதியுள்ள பழையவுரைகளுடன் கணக்காயர் நாவலர் டாக்டர் ச. சோமசுந்தரபாரதியாரவர்கள் ஆராய்ந்தெழுதிய தொல்காப்பியப் பொருட்படலப் புறத்திணை யியற் புத்துரையும் சூத்திரந்தோறும் கால அடைவில் தொகுத் தமைக்கப் பெற்றுள்ளன. இவ்வுரைகளைப் பயில்வோர் உரைகளி லமைந்த அருஞ்சொற்பொருள்களையும் உரையாசிரியர்களின் கொள்கைகளையும் தெளிவாகவுணர்ந்து கொள்ளுதற்கு வாய்ப் பாக அவ்வவ்வுரைகளையொட்டிய உரைவிளக்கங்கள் அடிக்குறிப் பாகக் கொடுக்கப்பெற்றுள்ளன. சூத்திரந்தோறும் அமைந்த இம் மூன்றுரைகளின் பின்னே ஆய்வுரை என்ற பகுதி சேர்க்கப் பெற்றுளது. இது நூலாசிரியராகிய தொல்காப்பியனார் இயற்றிய மூலத்தை படியொற்றிச் சூத்திரத்தின் கருத்தும் பொருளும் தெளி வாகப் புலப்படும்படி எளியநடையில் எழுதப் பெற்றதாகும்.

தமிழ்நூல்களைப் பயில்வோர் தமிழ்முன்னோர் வழங்கிய தமிழெண்களை மறவாது பயன்படுத்தல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் இவ்வுரைவளப்பதிப்பில் சூத்திர எண்களும் பக்க எண்களும் தமிழெண்களாகவே அமைக்கப்பெற்றுள்ளன.