80 நாலடியார்-தெளிவுரை
உடுக்கை-உடை, அதுவும் உலறல், மானம் அழியும் கொடிய வறுமைநிலையை உணர்த்தும். அரிமா: அரி-சிங்கம். மாவிலங்கு சிங்கமாகிய விலங்கு.
142. சான்றாண்மை, சாயல், ஒழுக்கம் இவை மூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது-வான்றோயும் மைதவழ் வெற்ப! படாஅ, பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும், பிறர்க்கு. வானம் அளாவியவும், மேகங்கள் தவழ்கின்றவுமான உயரமான மலைகளையுடைய அரசனே! நற்குணங்களால் நிறைவுற்று அவற்றை ஆளுகின்றவோர் தன்மையும், தம் பழக்க வழக்கங்களிலே ஒருவகையான மென்மை இயல்பும் நல்லொழுக்கமும் ஆகிய இவை மூன்றும் புகழால் மேலுலகத்தையும் அளாவியிருக்கும் உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு மட்டுமே அல்லாமல், மற்றையோருக்குப் பெருஞ்செல்வம் வந்து சேர்ந்த காலத்தும் உண்டாவன அல்ல.
‘சான்றாண்மை முதலியன குடிப்பிறப்பால் வருவனவே
அல்லாமல், செல்வம் முதலியவற்றின் மிகுதியால் வருவன
அன்று’ என்று கூறுவதன் மூலம், உயர்குடிப் பிறப்பின் உயர்வு கூறப்பட்டது.
143. இருக்கை எழலும் எதிர்செலவும், ஏனை
விடுப்ப ஒழிதலோடு, இன்ன -குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாகக் கொண்டார், கயவரோடு
ஒன்றா உணரற்பாற்று அன்று.
சான்றாண்மை உடைய பெரியவர்களைக் கண்டபோது
தம் இருக்கையைவிட்டு எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்தலும், அவர்களை எதிர் கொண்டு சென்று வரவேற்றலும், அவர்கள் விடைகொடுத்த பின்பே அவர்களை விட்டுப் பிரிதலும் ஆகிய இத்தகைய பண்புகளை எல்லாம் உயர்ந்த குடியினிடத்தே பிறந்தவர்கள் தம்பாற் குறையாத ஒழுக்கங்களாக மேற்கொண்டிருக்கின்றனர். அதனால், அவர்களை அவை செய்தலில்லாத கயவர்களோடு ஒன்றாக வைத்து எண்ணுதல் பான்மையுடையது அன்று.
உருவால் ஒத்திருப்பினும் உயர்குடியினரும் கயவரும் தத்தம் ஒழுக்கத்தால் வேறுபட்டே இருப்பார்கள் என்பதற்குச் சில கூறி, உயர்குடியினரின் சிறப்புக் காட்டப் பெற்றது.