இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
‘இது சிட்டுக் குருவிகளின் ஓசை!’ என்று ஓர் அமைச்சர் பதில் அளித்தார்.
‘சிட்டுக் குருவிகள் இங்கே என்ன செய்கின்றன?’ என்று கேட்டார் மன்னர்.
‘குருவிகள் பறந்து விளையாடுகின்றன’ என்று அந்த அமைச்சர் பதில் அளித்தார்.
மன்னருக்குச் சினம் பொங்கிவந்தது.
‘இளவரசி விளையாடுவதற்காக அமைத்த சோலையில் சிட்டுக்குருவிகள் எப்படி விளையாடலாம்? கூப்பிடு காவல் வீரர்களை’ என்று பொரிந்து தள்ளினார் மன்னர்.
காவல் வீரர்கள் ஓடோடி வந்தனர்.
‘மாமன்னர் வாழ்க!’ என்று கூறி வணக்கம் இட்டு நின்றனர்.
‘இந்தச் சோலை இளவரசி விளையாடுவதற்காக அமைக்கப்பட்டது. இங்கு சிட்டுக் குருவிகளை விளையாட விட்டது தவறு. இன்றே அவற்றை யெல்லாம் இங்கிருந்து அப்புறப் படுத்துங்கள். இது என் கட்டளை’ என்று ஆணையிட்டார் மன்னர்.