பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கிய பார்வை



சான்றோர்தம் கைப்போக்கில் பல அருமையான அமைப்புகள் திட்டமிடப்படாமலே பதிந்துவிடும். அவ்வகையில் இவ்வமைப்பைக் கொள்ளலாம்.

இதுபோன்றே, பாரதியின் நேர்முகப் பார்வை இவ்வகையில் பதியாது போயிருப்பினும், அவரது உள்ளுணர்வு பார்வை திட்டமின்றியே கண்டிருக்கும். அஃது அவரது மேதைக்குச் சான்று. ஆயினும் அவரது உணர்வில் இவ்வமைப்பு அறிந்தோ அறியாமலோ பட்டமையால்தான் சிலம்பைப் பற்றிப் பாட எழுந்ததும் உணர்வைக் குழைத்த பொருளில்,

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” -என்று தமது நெஞ்சைப் பறிகொடுத்துப் பாடினார். அவ்வாறு நெஞ்சை அள்ள வைத்தது இம்மணிமாலை அமைப்பாகவும் இருக்கும் என்பதை குறிப்பது போன்றுதான் அடுத்தெழுந்த தொடர்

“... ...............சிலப்பதிகாரம்
என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு”-என்று அமைந்தது போலும்.

எனவே, “மணி ஆரம்” என்ற தொடர் ஒரு திறவு கோலாக இங்கு சிலப்பதிகார மணிப்பேழையைத் திறக்க வைத்து அணிந்து மகிழ வைக்கின்றது. பாரதியார் கோத்த மணி என்னும் சொல் சிலம்பில் இத்துணைக் கருத்துக்களையும் எண்ணத் தூண்டியது. இவ்வகையில் பாரதியார் -சிலப்பதிகாரத்திற்கும் ஒருவகையான திறவுகோலர் ஆகிறார்.

சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் மட்டுமன்று எளிய நாடோடி இலக்கியங்களிலும் பாரதியார் நெஞ்சை அள்ளிவிடுபவர். அவற்றில் அமைந்த சொற்சித்திரங்களையும் சுவைப்பவர்.

53