பக்கம்:பொன் விலங்கு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 - பொன் விலங்கு

சாயங்காலத்துக்குள் நான் வேறு ரூம் பார்த்துக் கொண்டு போய் விடுகிறேன் சார்!" என்று அவன் கல்லூரி முதல்வரிடம் கூறியபோது, "நோ.நோ...நீங்கள் நம் கல்லூரி எல்லைக்குள் தங்கியிருப்பது எங்களுக்கு வசதிக் குறைவாக இருக்கும் என்பதாக நான் நினைக்கிறேனோ என்று என்னைத்தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவுநாள்வேண்டுமானாலும் இங்கேதங்கியிருக்கலாம். என் தலையில் கட்டிக்கொண்டு போவது ஒன்றுமில்லை. உங்கள் செளகரியத்துக்காகத்தான் சொல்ல வந்தேன்..." என்று மோவாய்க்குக் கீழே நரையும் கருமையுமாகக் கலந்து வளரத் தொடங்கியிருந்த புல்கானின் தாடியைத் தடவிக்கொண்டே உபசாரமாக அவனுக்குப் பதில் சொல்லியிருந்தார் அவர்.

"ஆமாம்! ஆமாம்! நீங்கள் என் செளகரியத்துக்காகத்தான் சொல்லுவீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன?" என்று அவருடைய பேச்சின் போக்கிலேயே அப்போது அவரை மடக்கிப் பேசி அனுப்பியிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க்கும் சரியான ஆஷாட பூதிகள் என்பது காலையில் அவர்களைச் சந்தித்த முதற் பார்வையிலேயே அவனுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அதைப் புரிந்துகொண்ட மறுகணமே அவன் அங்கிருந்து உலாவப் புறப்படுவதுபோல் வெளியேறித் தங்கி வசிக்க அறை தேடுவதற்காக லேக் அவென்யூ”வுக்குப் புறப்பட்டு விட்டான். அவசரத்துக்குத் தனி அறையாகக் கிடைப்பதைப் பார்த்துத் தேடித் தங்கிக் கொண்டாலும் வாடகையைப் பகிர்ந்து கொள்வதற்குப் பின்னால் இரண்டொருவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன். காலை நேரமாகையால் வெய்யில் வருவதற்கு முன்பாகப் படகில் ஏறிச் சுற்றுகிறவர்களும், சுற்றுவதற்குப் படகு காலியாவதை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுமாக ஏரியும் ஏரிக்கரையும் பரபரப்பாக இருந்தது. கரை ஓரமாக நீலப் பட்டுக்குப் பல வண்ணச் சரிகைக் கரையிட்டதைப்போல் ஊதாவும், சிவப்பும், மஞ்சளும், வெள்ளையுமாகப் பூக்கள் கொள்ளை கொள்ளையாகப் பூத்திருந்தன. வேறு வேறு நிறங்களில் ஸ்வெட்டரும், மப்ளரும், கம்பளிப் போர்வையுமாக அணிந்து கொண்டு சாலையில் மக்கள் நடமாடத் தொடங்கியிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/224&oldid=595267" இலிருந்து மீள்விக்கப்பட்டது