பக்கம்:பொன் விலங்கு.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 - பொன் விலங்கு

சேவல் ஒன்று எங்கிருந்தோ ஒருமுறை கூவியது. வெறும் சொல்லுக்கும் நினைப்புக்கும் பொருள் எந்த இடத்தில் முடிகிறதோ அந்த இடத்திலிருந்துதான் உணர்ச்சி பிறக்கிறது. மோகினி அப்போது உணர்ச்சி மயமாயிருந்தாள். திடீரென்று அந்த அகாலத்தில் உடனே நீராடிவிட்டு வரவேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. குளியலறைக்குப் போய்ச் சந்தனச் சோப்புப் பூசி உடல் குளிர நீராடி வேறு நல்ல புடவை மாற்றித் திலகமிட்டுக் கொண்டாள் அவள். கண்களுக்கு ஆசையோடு மையும் தீட்டிக்கொண்டாள். அவள் அப்போது அந்த நள்ளிரவில் தனக்குத்தானே செய்துகொண்ட காரியங்களுக்கு ஏதோ ஒரு அர்த்தமிருக்கிறாற் போலவும் தோன்றியது. ஒர் அர்த்தம் இல்லை போலவும் தோன்றியது. அவள் அப்போதுதான் பரிபூரணமான சந்தோஷத்தோடு இருப்பதாகவும் உணர்ந்தாள். அப்படி உணர்ந்த மறுகணமே அதன் மறுபுறத்தில் பரிபூரணமான துக்கத்தையும் உணர்ந்து அநுபவித்தாள். இருளில் தட்டுத் தடுமாறித் தோட்டத்துக்கு ஓடிப்போய் அரைகுறையாக மலர்ந்திருந்த இரண்டொரு ரோஜாப் பூக்களையும், அடுக்கடுக்கான குடை மல்லிகைப் பூக்களையும் பறித்து ஈரக்கூந்தலை முடித்து அதில் சொருகிக் கொண்டு வந்தாள். ஏதோ நினைத்தவளாக உள்ளே போய்த் தேடி எடுத்து அரங்கேறிய நாளிலிருந்து தன் பட்டுப்பாதங்களை அலங்கரித்த அந்தச் சலங்கைகளையும் பாரதி எழுந்து விடுவாளோ என்ற பயத்தோடு காலில் ஒசைப்படாமல் அணிந்து கொண்டாள். இந்தப் பாழாய்ப்போன உலகத்துக்குப் புகழோடும், பெருமையோடும், தான் அறிமுகமாகக் கருவியாக இருந்த எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்து எடுத்துக்கொண்டு போய்விட வேண்டும் போல ஒர் ஆசை அப்போது அவளுள்ளே எழுந்துதவித்தது. மேஜை விளக்கருகே கையைக் கொண்டு போய்ப் பட்டுப் புடவைத் தலைப்பினால் தன் விரலிலிருந்த மோதிரத்தைத் தேய்த்துப் பளபளக்கச் செய்தபின் அதன் பொன்னொளியில் தன் முகத்தைப் பார்த்தபோது அந்த மோதிரத்தை அணிவித்த தெய்வத்தின் ஞாபகம் வந்து மனத்தைப் பிசைந்தது. அவளுடைய சலங்கையணிந்த பாதங்கள் உடனே எங்கோ புறப்பட்டுப் போய்விட வேண்டும் போல் துடிதுடித்தன. மைதீட்டிய விழிகள் யாரையோ பார்க்கப் பறந்தன. சிவந்த உதடுகள் யாரிடமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/672&oldid=595942" இலிருந்து மீள்விக்கப்பட்டது