பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

317


 
இராசீவின் ஐந்தாய அரசு கரவான,
சூழ்ச்சியான ஓர் அமைப்பு!


ண்மையில் இராசீவ் அரசு, இந்திய அரசியல் சட்டத்தின் 64-ஆவது பிரிவுக்கு ஒரு திருத்தச் சட்ட வரைவைத் திட்டமிட்டுக் கொணர்ந்து, நாடாளுமன்றத்தில் கடந்த மே மாதம் 15-ஆம் பக்கல் அதைப் பெரும்பான்மை ஒப்போலைகளால் நிறைவேற்றியும் கொண்டது.

பெரும்பாலான இந்திய மாநிலச் சட்டமன்றங்களில் இந்திரா பேராயக் கட்சி தன் ஆட்சி வாய்ப்பை இழந்து போன நிலையில், தனக்குள்ள நடுவணரசு அதிகாரத்தை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி ஆட்சிக்கமர்ந்த மாநிலங்களில், அவற்றின் அதிகாரத்தை ஒடுக்கித், தன் ஆட்சிக் கால்களை எவ்வாறு அகல ஊன்றிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு, மிக மிகக் கரவாகவும், மிகவும் சூழ்ச்சியாகவும் எண்ணிப் பார்த்தது. இறுதியில், தாயிடத்திலிருந்து குழந்தைகளைப் பிரிக்கின்ற முறையில் மாநிலங்களின் ஆளுமையில் உள்ள சிற்றூர்ப்புறங்களை நேரடியாகத் தன் ஆளுமையின் கீழ்க் கொணரும் முயற்சியாக ஐந்தாய அரசு, (பஞ்சாயத்து ராஜ்ஜியம்) என்னும் ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டது.

இந்த ஐந்தாய ஆட்சி அமைப்பைப் பற்றிச் சுருக்கமாக மதிப்பிட்டால், நடுவணரசு, மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை வாங்கிச் சிற்றூர்ப்புறங்களில், ஐந்து பெயர்கள் கொண்ட குழுவினரிடம் ஒப்படைக்கின்ற செயலே ஆகும்.