பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

வேண்டும் விடுதலை

அதே போல், "மேற்கூறிய மனநலத்தின் அனைத்துக் கூறுகளும் தாம் ஓர் இனத்தின் எதிர்கால வளர்ச்சிக்குப் பயன்படுவன ஆகும்; மற்று, அவைதாம் ஓர் இனத்திற்கு நலமாகவும், காப்பாகவும் இருக்கும்” என்பது இரண்டாம் குறள் நெறியின் அடைவுக் கருத்து!

இவ்விரு திருக்கூற்றுகளால் நாம் பெறப்படுபவை என்னென்றால், ஓர் இனத்தின் முழு நலமே, வலிவே, அவ்வினத்தின் அனைத்து அறிவுக் கூறுகளுக்கும் காப்பாக இருப்பது போல், அவ்வறிவுக் கூறுகளுமே அவ்வின வலிவுக்குக் காப்பாக அமைவன ஆகும். நம் கலை, பண்பாடு, நாகரிகம், மொழி, இலக்கியம் முதலியவை நம் இனத்துக்கு வலுவூட்டக் கூடியவை. ஆனால் அவை இற்றை வடநாட்டுப் பார்ப்பனிய முதலாளிய இராசீவ் அரசால் அழிக்கப்படுகின்றன. அதேபோல் நம் இனத்தின் வலிவே - நலமே - நம் கலை, பண்பாடு, நாகரிகம், மொழி முதலியவற்றுக்கும் காப்பாக விளங்கக் கூடியன. அந்த இனமும் இன்றைய ஆரியமயத் தில்லியரசால் அழிக்கப்படுகிறது. இவ்வாறு நம் இனத்தின் காக்கும் பொருளும், காக்கப்படும் பொருளும், மற்றோர் இனமாகிய நம் பகை இனத்தால் அழிக்கப்படுகையில் நம் எதிர்காலமே இருண்டு வருகிறது என்பதை நாம் உணர வேண்டாவா?

இதை நம் மக்கள் உணர்ந்து எழுச்சியுற்றுப் போராடித் தடுத்து நிறுத்த முன்வர வேண்டாமா ? முன் வருதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் பழம்பெருந் தமிழினம் உய்வு பெறும். அதுவரை நாம் எதிர்கொள்ளும் எத்தகைய அரசியல், பொருளியல், வாழ்வியல், வரலாற்றியல், பண்பியல் ஆகியனவும் மற்றும் பிற அனைத்து நலன்களும் பயனற்றனவே, நிலையற்றனவே ஆகும்!

- தமிழ்நிலம், இதழ் எண். 129, செபுதம்பர், 1989