பக்கம்:வைணமும் தமிழும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வைணவமும் தமிழும்



ஒர் அற்புத நிகழ்ச்சி: நடுநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகிய திருக்கோவலூரில்[1] ஓர் அற்புத நிகழ்ச்சிநடைபெறுகின்றது. கதிரவன் மறைந்த பின்னர் வானம் இருண்டு விடுகின்றது. மழை கொட்டப்போகும் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்நிலையில் தூறலில் நனைந்து கொண்டே மிருகண்டு என்ற ஒர் அந்தணர் இல்லத்திற்கு வருகின்றார். ஒருவர் மழைக்கு ஒதுங்கவும், இரவு நேரத்தைக் கடக்கவும் இடம் கேட்கின்றார். இல்லத்திற்குரியவர் வீட்டின் முன்புறமுள்ள இடைகழி (ரேழி - என்பது உலக வழக்கு) யைக் காட்டி அதில் ஒருவர் படுக்கலாம் என்று கூறி இடம் கொடுத்துக் கதவினைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே போய்விடுகின்றார். வந்த இவர்தான் பொய்கையாழ்வார். மழையோ வலுக்கத்தொடங்கு கின்றது. சிறிது நேரத்தில் இன்னொருவர் வந்து அதே வீட்டில் தங்க இடம் கேட்கின்றார். பொய்கையார் 'ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம்' என்று கூறிக் கொண்டே வந்தவருக்கு இடம் தருகின்றார். மேலும் சிறிது நேரம் கழிந்ததும் மழையில் நனைந்து கொண்டே மூன்றாவதாக மற்றொருவர் அதே இல்லத்திற்கு வந்து ஒதுங்க இடம் வேண்டுகின்றார். இடைகழியிலிருந்த இருவரும் 'ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்’ என்று கூறிக் கொண்டே அவரையும் அழைத்துக் கொள்ளுகின்றனர். இப்போது வந்தவர் பேயாழ்வார்.


  1. இது 108 திவ்வியதேசங்களில் ஒன்று. விழுப்புரம்-காட்டுபாடி இருப்பூர்த்தி நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது.