4
வைணவமும் தமிழும்
ஆண்குழவிகளிடமேயேன்றிக் கடவுளரிடத்தும் கடவுள் குழவியரிடத்தும் காமப்பகுதி செலுத்துவதற்குரியவர் என்பதனைத் தொல்காப்பியர்,
- காமப் பகுதி கடவுளும் வரையார்
- ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்,[1]
- குழவி மருங்கினும் கிழவதாகும்[2]
என்ற நூற்பாக்களால் புலப்படுத்துவர். இது தெய்வக் குழவியாகிய கண்ணனிடம் ஆயமகளிர் கொண்ட காதல் வெள்ளத்தை உட்கொண்டு கூறப்பெற்றதாகக் கொள்ளலாம். இவற்றால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே (கி.மு. முதல் நூற்றாண்டு) திருமால் வழிபாடு தமிழகத்தில் வேரூன்றி இருந்தமை தெளிவாகின்றது.
வாசுதேவனான இக் கண்ணனைச் சங்கர்ஷண மூர்த்தியாகிய பலதேவனுடன் கொண்டு தோன்றிய முறை விந்திய மலைக்கும் அப்பால் உள்ள வடநாடுகளிலே ஒரு காலத்துச் சிறப்பாக இருந்தது என்பதையும் பண்டைய வட நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் அறியக் கிடக்கின்றது.[3] இத்தகைய சங்கர்ஷண-வாசுதேவ வணக்கமே தென்னாட்டிலும் பரவி வழங்கியதற்குச் சங்கநூல்கள் பலவும் சான்றாக அமைகின்றன. தொல்காப்பியனார்க்கு இவ்வணக்கத்தைப்பற்றி வெளிப்படையாகக் கூற நேராமல் போயினும், அவர்காலத்து மாயோனான கண்ணன் வழிபாடே