பக்கம்:வைணமும் தமிழும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

13



பால்நிற வண்ணன்போல்
பனைக் கொடிப் பழிதிரிந்த வெள்ளையும்
பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நேமித்
திருமறு மார்பன்போல் திறல் சான்ற காரியும் (8-10)

என்ற அடிகளில் பனைத் கொடியைக் கொண்ட பால் நிற பலதேவனைப் பற்றிய குறிப்பும் திருவாகிய மறுவினையுடைய (ஶ்ரீ வத்சம்) திருமாலைப்பற்றிய குறிப்பும் வருகின்றன. இதே பாடலில்,

பால்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்
நீணிற வண்ணன்(37-38)

என்ற அடிகளில் திருமாலைப்பற்றிய குறிப்பும் காணப் பெறுகின்றது. அடுத்த பாடலில் (கலி.105),

வள்ளுரு நேமியான் வாய்வைத்த வளைபோலத்
தெள்ளிதின் விளங்கும் களிநெற்றிக் காரியும் (9-10)

என்ற அடிகளில் மாயோன் ஆழி தாங்கிய கையன் என்றும் அவன் வாய் வைத்து ஊதும் சங்குபோல் கரி கொண்ட நெற்றியையுடைய கரிய ஏறு என்ற குறிப்பும், அதே பாடலில் நம்பி மூத்த பிரானைப் பற்றிய குறிப்பும் (11-12) வருகின்றன.

நெய்தற் கலியின் ஒரு பாடலில் (கலி-124)

ஞாலமூன் றடித்தாய முதல்வர்க்கு முதுமறைப்
பாலன்ன மேனியான் அணிபெறத் தைஇய (1-2)

என்ற அடிகளில் உலகம் மூன்றும் தன் திருவடியால் அளந்தவனைப்பற்றிய குறிப்பினையும் இவனுக்கு மூத்த முறையினையுடைய நம்பி மூத்தபிரானைப் பற்றிய குறிப்பினையும் காணலாம்.