பக்கம்:வைணமும் தமிழும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருமால் திருவருளால் மலர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அருள்மிக்குப் பாடிய இனத்தமிழ்ப் பாசுரங்களே நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இதனுள் திகழும் பாசுரங்கள் ஒவ்வொன்றும் செவிக்கினிய செஞ்சொல்லால் ஆயது. சொற்கவை பொருட்சுவைகளிற் சிறந்தது; பிறவித் துயரறுத்து அந்தமில் பேரின்பத்தை அளிக்க வல்லது. இவ்வாற்றான் ஒவ்வொரு பாசுரமும் நூல் எனத் தக்க மாட்சிமையுற்று நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று வழங்கலாயிற்று. இது மக்களின் கீழ்மையை அகற்றி மேன்மையை அளிக்கும் மறையாய் விளங்குதலின் இதனைத் 'தென்மொழி மறை'யென்பர் சான்றோர். வடமொழி மறையினும் சிறப்புடைய தென்றும் சாற்றுவர்.

கால வெள்ளத்தாலும் போற்றுவாரின்மையாலும் எப்படியோ மறைந்து போன இப்பாசுரங்களைத் திரட்டி வேத வியாசர் வேதங்களை நான்காக வகுத்துத் தொகுத்ததுபோல் நாதமுனிகளும் இப்பாசுரங்களை நான்கு தொகுதிகளாக்கி ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாசுரங்கள் அடங்கியிருக்குமாறு அடைவுபடுத்தினார். பாசுரங்களை அவர் 'இசைப்பா' 'இயற்பா' எனப் பிரித்து இசைப்பாக்களை மூன்று தொகுதிகளாகவும் இயற்பாக்களை ஒரு தொகுதியாகவும்