சோறு அளித்த சேரன்
21
பகைவரை அடக்குவது ஒன்றுதான் நம் இலக்கு. அதற்கு ஏற்ற தந்திரங்கள் எவை? நாட்டுக்கு அதிக ஊறுபாடு நிகழாமல் போரிட வழி என்ன?’ என்றெல்லாம் அமைச்சர்களுடன் விரிவாக ஆராய்வான்.”
"செயலில் முனையாமல் ஆராய்ந்து சூழ்ந்து என்ன பயன்?"
"பலமற்றவர் செய்யும் ஆராய்ச்சி அல்ல இது. பலமுடையவன் நாடு வாழவேண்டும் என்னும் நோக்கத்தோடு தீர ஆராயும் சூழ்ச்சி இது. அவன் தனி மனிதன் என்ற நிலையில் உறுதி குலையாத மனத் திண்மை படைத்தவன். அரசனென்ற வகையில் வீரமும் வலிமையும் உடைய படைகளைப் பெற்றவன். சூறாவளிக் காற்றைப் போன்ற வலிமை அது. அதன் முன் எந்தப் படையும் நில்லாது."
'இவ்வளவு பலமுடையவன் காலத்தைப் போக்கிக்கொண்டே இருப்பானா?'
"அதுதான் இல்லை. பகைவர்களின் குறும்பு தனக்குத் தெரியும் என்பதைக் காட்டிப் பொறுமையை மேற்கொள்ளும்போது பலர் தம் பகைமையை விட்டொழிப்பர். போருக்கு வேண்டிய யோசனை செய்கிறான் என்ற அளவில் பகைவர் பலர் அஞ்சி ஒடுங்குவர். பின்னும் முனைபவர்கள் அரசனது படை வன்மையைக் கண்டு பேதுறுவர். அதுவும் செய்யாது போருக்கு எழுபவரை அழிப்பதில் தீயைப் போன்றவன் மன்னன். எத்தகைய படையாக இருந்தாலும் பொடியாக்கி விடுவான்.'
"எல்லோரையும் போலப் பகையை அடக்கும் அரசன் தானே அவன்?"