திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
எருசலேம் கோவில் கட்டப்பட்டு எழும்புவதை சாலமோன் அரசர் மேற்பார்வையிடுகிறார். விவிலிய நூல் ஓவியம். ஆண்டு: சுமார் 1450. காப்பிடம்: கொலோன், செருமனி


2 குறிப்பேடு (The Second Book of Chronicles) [1][தொகு]

முன்னுரை

"இரண்டாம் குறிப்பேடு" என்னும் இந்நூல் "முதலாம் குறிப்பேட்டின்" தொடர்ச்சியாகும். இதன் முதற் பகுதி சாலமோனது ஆட்சியின் தொடக்கம் முதல் அவரது இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறது.

இரண்டாம் பகுதி அரசர் சாலமோனின் மகனும் அவருக்குப்பின் வந்தவனுமான ரெகபெயாமுக்கு எதிராக எரொபவமாவின் தலைமையில் வடநாட்டுக் குலங்கள் கிளர்ந்தெழுந்ததை விளக்குகிறது.

மூன்றாம் பகுதி எருசலேம் வீழ்ச்சியுற்ற கி.மு. 586 வரையிலான தென்னாட்டுக் குலங்கள் பற்றிய வரலாற்றைக் கொண்டுள்ளது.

2 குறிப்பேடு[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. சாலமோனின் ஆட்சி

அ) முற்பகுதி
ஆ) கோவில் கட்டப்படல்
இ) பிற்பகுதி

1:1 - 9:31

1:1-17
2:1 - 7:10
7:11 - 9:31

658 - 712

658 - 659
659 - 667
667 - 671

2. வடநாட்டுக் குலங்களின் கலகம் 10:1-19 671 - 672
3. யூதாவின் அரசர்கள் 11:1 - 36:12 672 - 711
4. எருசலேமின் வீழ்ச்சி 36:13-23 711- 712

2 குறிப்பேடு[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

சாலமோன் ஞானத்திற்காக மன்றாடல்[தொகு]

(1 அரச 3:1-15)


1 தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை உறுதியாக நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து அவரை மேன்மை மிக்கவர் ஆக்கினார்.


2 சாலமோன், இஸ்ரயேலர் அனைவரையும் - ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்கள், நீதிபதிகள், இஸ்ரயேலரின் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் அனைவரையும் - வரவழைத்துப் பேசினார்.
3 அங்கே இருந்த சபையார் அனைவரும் சாலமோனுடன், கிபயோனிலிருந்த தொழுகை மேட்டுக்குச் சென்றனர். ஏனெனில் ஆண்டவரின் அடியார் மோசே பாலை நிலத்தில் செய்த கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கே இருந்தது.
4 ஆனால் இதற்குமுன் தாவீது கடவுளின் பேழையை கிரியத்து எயாரிமிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அங்கே ஏற்கெனவே தாம் அதற்கென அமைத்திருந்த கூடாரத்தில் வைத்திருந்தார். [1]
5 இருப்பினும் கூரின் பேரரும் ஊரியின் மகனுமான பெட்சலேல் செய்த வெண்கலப் பலிபீடம் கிபயோனில் ஆண்டவரின் திருஉறைவிடத்திற்குமுன் இருந்தது. சாலமோனும் சபையாரும் அங்கே வழிபாடு நடத்தச் சென்றனர். [2]
6 சாலமோன் சந்திப்புக்கூடாரத்திற்கு முன்பாக ஆண்டவர் திருமுன் அமைந்திருந்த வெண்கலப் பலிபீடத்திற்கு ஏறிச்சென்று, அதன்மேல் ஆயிரம் எரி பலிகள் செலுத்தினார்.


7 அன்றிரவு கடவுள் சாலமோனுக்குத் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்; கேள்" என்று கூறினார்.


8 அதற்குச் சாலமோன் கடவுளை நோக்கி, "என் தந்தை தாவீதுக்கு மாபேரன்பு காட்டினீர்; அவருக்குப் பின் நீர் என்னை அரியணையில் அமர்த்தியிருக்கிறீர்.
9 கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் அளித்த வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்; ஏனெனில், நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு நீர் என்னை அரசனாக்கினீர்; [3]
10 எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்; ஏனெனில் கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?" என்றார்.


11 கடவுள், சாலமோனை நோக்கி, "செல்வத்தையோ, சொத்தையோ, புகழையோ, உன்னை வெறுப்பவர்களின் உயிரையோ, நீடிய ஆயுளையோ, நீ கேட்கவில்லை. மாறாக, அரசாளும்படி உன்னிடம் நான் ஒப்படைத்த மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையும் நீ உள்ளார்ந்த விருப்பத்தோடு கேட்டிருக்கிறாய்.
12 எனவே, நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறேன். அத்துடன் உனக்கு முன் இருந்த அரசர்களோ உனக்குப் பின் வரும் அரசர்களோ பெறாத அளவுக்கு செல்வத்தையும், சொத்தையும், புகழையும் நான் உனக்குத் தருவேன்" என்றார்.

சாலமோனின் ஆற்றலும் செல்வமும்[தொகு]

(1 அர 5:1-18)


13 பிறகு சாலமோன் கிபயோனிலிருந்த தொழுகை மேட்டிலிருந்தும் சந்திப்புக் கூடாரத்திலிருந்தும் புறப்பட்டு எருசலேமுக்கு திரும்பி வந்து, தொடர்ந்து இஸ்ரயேலை ஆட்சி செய்தார்.
14 சாலமோன் தேர்ப் படையையும் குதிரைப் படையையும் அமைத்தார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். அவர்களைத் தேர்ப்படை நகர்களிலும், அரசராகிய தம்மோடு எருசலேமிலும் நிறுத்தி வைத்தார். [4]
15 வெள்ளியும் பொன்னும் கற்களைப்போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிப் பகுதிகளில் வளரும் அத்தி மரங்களைப் போன்றும் எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கும்படி அரசர் செய்தார்.
16 சாலமோனின் குதிரைகள் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் வந்தவை. அரச வணிகர்கள் சிலிசியாவிலிருந்து குறிப்பிட்ட விலைக்கு வாங்கி வந்தனர். [5]


17 அவர்கள் தேர் ஒன்றிற்கு அறுநூறு செக்கேல் எனவும் எகிப்திலிருந்து விலைக்கு வாங்கினர். அவை அவர்கள் வழியாகவே இத்திய மன்னர், சிரிய மன்னர் அனைவரையும் சென்றடைந்தன.

குறிப்புகள்

[1] 1:4 = 2 சாமு 6:1-17; 1 குறி 13:5-14; 15:25-16:1.
[2] 1:5 = விப 38:1-7.
[3] 1:9 = தொநூ 13:16; 28:14.
[4] 1:14 = 1 அர 4:26.
[5] 1:16 = இச 17:16.

அதிகாரம் 2[தொகு]

கட்டுவதற்கான முன்னேற்பாடுகள்[தொகு]

(1 அர 5:1-18)


1 சாலமோன் ஆண்டவரின் திருப்பெயருக்கென ஒரு கோவிலையும் தமக்கென ஓர் அரச மாளிகையையும் கட்டியெழுப்ப முடிவு செய்தார்.
2 சுமைசுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலைகளில் கருங்கற்களை வெட்டுவதற்கு எண்பதினாயிரம் பேரையும், அவர்களைக் கண்காணிக்க மூவாயிரத்து அறுநூறு பேரையும் நியமித்தார்.


3 தீரின் மன்னன் ஈராமிடம் சாலமோன் தூதனுப்பிக் கூறியது: "என் தந்தை தாவீது வாழும்படி ஒரு மாளிகை கட்ட நீர் அவருக்குக் கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே! அவருக்குச் செய்ததுபோலவே எனக்கும் செய்தருளும்.
4 நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் தூபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.
5 எம் கடவுள் எல்லாத் தெய்வங்களையும் விட மிகப் பெரியவர்! எனவே, நான் கட்டப்போகிற கோவிலும் மிகப் பெரியதாயிருக்கும்.
6 விண்ணும் விண்ணுலகும் அவரைக் கொள்ள இயலாதிருக்க, அவருக்கேற்ற ஒரு கோவில் கட்ட யாரால் முடியும்? அவரது திருமுன் தூபம் காட்டவதற்கேயன்றி அவருக்கென ஒரு கோவில் எழுப்ப நான் யார்? [1]
7 ஆகவே, ஒரு திறமைமிக்க கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதா, கருஞ்சிவப்பு, நீலநூல் வேலைப்பாட்டிலும், சிற்பம் செதுக்குவதிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்க்பட்டவர்களும், என்னோடு யூதா, எருசலேமில் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்ய வேண்டும்.
8 மேலும், லெபனோலிருந்து கேதுரு மரங்கள், தேவதாரு மரங்கள், வாசனை மரங்கள் ஆகியவற்றை நீர் எனக்கு அனுப்பிவையும். ஏனெனில், உம் பணியாளர் லெபனோனின் மரங்களை வெட்டுவதிலும் திறமைமிக்கவர் என நான் அறிவேன். என் பணியாளரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பர்.
9 அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த கோவில் ஒன்றை நான் கட்டவிருக்கிறேன்.
10 மரங்களை வெட்டும் உம் பணியாளருக்கு நான் இருபதினாயிரம் மரக்கால் பதப்படுத்தப்பட்ட கோதுமையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், இருபதினாயிரம் குடம் திராட்சை இரசமும், இருபதினாயிரம் குடம் எண்ணெயும் கொடுப்பேன்."


11 அதற்கு தீரின் மன்னன் ஈராம் [2] சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: "ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். ஆதனால் உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.
12 விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவரே ஆண்டவராகிய தமக்கு ஒர் இல்லத்தையும் அரசராகிய உமக்கு ஓர் அரண்மனையையும் கட்டுவதற்கு விவேகமும் அறிவாற்றலுமுடைய ஞானியாம் உம்மைத் தாவீது அரசருக்கு மகனாகத் தந்தருளினார்!


13 எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பிகிறேன்.
14 அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்; அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கருங்கல், மரம் ஆகியவற்றிலும், ஊதா நீலம் கருஞ்சிவப்பு நூல், மெல்லிய சணல் வகைகளிலும் வேலை செய்யும் திறன்மிக்கவன். எல்லாவித சித்திர சிற்ப வேலைகளையும் அறிந்தவன்; அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன்; உம் கலைஞரோடும், உம் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.
15 எனவே, என் தலைவரே, நீர் வாக்களித்தபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உம் பணியாளர்களுக்கு அனுப்பும்.
16 நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோனில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யாப்பாவரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்."

திருக்கோவில் கட்டப்படல்[தொகு]

(1 அர 6:1-38)


17 பிறகு சாலமோன் தம் தந்தை தாவீதைப்போன்று இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அன்னியரைக் கணக்கிட்டார். அவர்கள் எண்ணிக்கை ஓர் இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூறு.
18 அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல் வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.

குறிப்புகள்

[1] 2:6 = 1 அர 8:27; 2 குறி 6:18.
[2] 2:11 'ஊராம்' என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை