திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 38 முதல் 40 வரை

விக்கிமூலம் இலிருந்து
திருஉறைவிடம் எழும்புகிறது; மோசே பார்வையிடுகிறார் (விப 40:17-19). விவிலிய ஓவியம். காலம்: 1728. காப்பிடம்: தி ஹேக், ஓலாந்து.


விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

அதிகாரங்கள் 38 முதல் 40 வரை

அதிகாரம் 38[தொகு]

எரிபலி பீடம் செய்தல்[தொகு]

(விப 27:1-8)


1 சித்திம் மரத்தால் அவர் ஓர் எரிபலிபீடம் செய்தார்.
அது நீளம் ஐந்து முழமும் அகலம் ஐந்து முழமுமாகச்
சதுரவடிவமாயிருந்தது.
அதன் உயரமோ மூன்று முழம்.
2 அதன் நான்கு மூலைகளிலும் அவர் கொம்புகளை அமைத்தார்;
கொம்புகள் அதனோடு ஒன்றிணைந்திருந்தன;
அதை வெண்கலத்தால் மூடினார்.
3 அவர் பலிபீடத்தின் துணைக்கலன்கள் அனைத்தையும் செய்தார்;
சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள்,
பலிக்கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய
எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்தார்.
4 பலிபீடத்தைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து
அதன் பாதிப்பகுதியை எட்டும்படி
அதன் விளிம்புகளுக்குக்கீழே அவர் பொருத்தினார்.
5 தண்டுகளைத் தாங்குவதற்காக நான்கு வளையங்களை வார்த்து
அதன் வெண்கல வலைப்பின்னலின் நான்கு மூலைகளிலும் அவர் பொருத்தினார்.
6 அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து
வெண்கலத்தால் மூடினார்.
7 பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக
அதன் இரு பக்கங்களிலும் தண்டுகளை
வளையங்களில் அவர் செலுத்தினார்.
பலகைகளைச் சேர்த்து உள்கூடாக அமைத்தார்.

வெண்கல நீர்த்தொட்டி செய்தல்[தொகு]

(விப 30:18)


8 சந்திப்புக் கூடார நுழைவாயிலில் பணியாற்றும் பெண்கள் கொண்டு வந்த
வெண்கலக் கண்ணாடிகளைக் கொண்டு
அவர் வெண்கல நீர்த்தொட்டியையும்,
அதன் வெண்கல ஆதாரத்தையும் செய்தார்.

கூடார முற்றம் செய்தல்[தொகு]

(விப 27:9-19)


9 அவர் முற்றத்தை உருவாக்கினார்;
தெற்குப்பக்கம், தென்திசை நோக்கிய முற்றத்திலுள்ள தொங்கு திரைகள்
முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டால் ஆனவை;
நூறு முழம் நீண்டவை.
10 அவற்றிற்கான இருபது தூண்களும்
இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை.
தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
11 அவ்வாறே வட பக்கத்திலும் தொங்கு திரைகள் நூறு முழம் நீண்டவை.
அதற்கான இருபது தூண்களும்,
இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை.
தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
12 மேற்குப் பக்கத்தில் ஐம்பது முழத் தொங்கு திரைகள் இருந்தன.
அவற்றிற்காகப் பத்துத் தூண்கள்
பத்துப் பாதப்பொருத்துகள் இருந்தன.
தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலானவை.
13 கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கி
ஐம்பது முழத் தொங்கு திரைகள் இருந்தன.
14 அதன் ஒரு பகுதியில் பதினைந்து முழத் தொங்கு திரைகள்,
மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.
15 இதுபோன்றே, முற்றத்தின் நுழைவாயிலுக்கு மறுபகுதியிலும்
பதினைந்து முழத் தொங்கு திரைகள், மூன்று தூண்கள்,
மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.
16 முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தொங்கு திரைகளும்
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் ஆனவை.
17 தூண்களின் பாதப் பொருத்துகள் வெண்கலத்தால் ஆனவை.
தூண்களின் கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
அவற்றின் பொதிகைகள் வெள்ளியால் பொதியப்பட்டவை.
முற்றத்தின் தூண்கள் அனைத்துமே வெள்ளிப் பூண்கள் கொண்டிருந்தன.
18 முற்றத்து நுழைவாயிலின் தொங்கு திரை நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நூலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டும்,
பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது.
அதன் நீளம் இருபது முழம்;
அதன் அகலமும் உயரமும் முற்றத்தின் தொங்கு திரைகளுக்கு இணையாக ஐந்து முழமாம்.
19 அதற்காக நான்கு தூண்களுக்கும்
நான்கு வெண்கல பாதப்பொருத்துகள் இருந்தன.
அவற்றின் கொக்கிகளும், பொதிகைகளும்,
பூண்களும் வெள்ளியால் மூடப்பட்டிருந்தன.
20 திருஉறைவிடத்திலும் சுற்று முற்றத்திலுமுள்ள முளைகள் எல்லாம்
வெண்கலத்தால் ஆனவை.

கூடாரத்திற்குப் பயன்பட்ட பொருள்கள்[தொகு]


21 திருஉறைவிடத்தின் அதாவது உடன்படிக்கைத் திருஉறைவிடத்தின்
இருப்புக் கணக்கில் இருந்தவை இவையே:
மோசேயின் கட்டளைப்படி குரு ஆரோனின் மகன் இத்தாமரின் பொறுப்பில்,
லேவியர் எடுத்த கணக்கு பின்வருமாறு:
22 யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகன் ஊரியின் புதல்வரான பெட்சலேல்
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டது அனைத்தையும் செய்தார்.
23 அவரோடு இருந்தவர் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு.
அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார்.
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும்
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும்
பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.


24 தூயகத்தின் அனைத்துப் பணிக்கும் பயன்பட்ட தங்கமெல்லாம்
ஆரத்திக் காணிக்கைவழி வந்தது.
அது தூயகச் செக்கேல் நிறைப்படி
ஆயிரத்து நூற்றெழுபது கிலோ கிராம் ஆகும். [1]
25 மக்கள் கூட்டமைப்பில் எண்ணப்பட்டவர்களிடமிருந்து வந்த வெள்ளி
தூயகச் செக்கேல் நிறைப்படி நாலாயிரத்து இருபது கிலோ கிராம் ஆகும். [2]
26 இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் எண்ணப்பட்டார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டியது தலைக்கு ஆறு கிராம்[3]
அதாவது தூயகச் செக்கேல் நிறைப்படி அரைச் செக்கேல்.
இத்தகைய ஆண்கள் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர் இருந்தனர். [4] [5]
27 தூயகத்திலுள்ள பாதப்பொருத்துகளையும்,
திருத்தூயகத் திரைக்கான பாதப்பொருத்துகளையும் வார்க்க,
நாலாயிரம் கிலோ கிராம் [6] வெள்ளியாயிற்று.
ஒரு பாதப்பொருத்துக்கு நாற்பது கிலோ கிராமாக
நூறு பாதப்பொருத்துகளுக்கு நாலாயிரம் கிலோ கிராம் ஆயிற்று.
28 அதிலிருந்து இருபது கிலோ கிராம் [7] எடுத்து,
அவர் தூண்களுக்கான கொக்கிகள் செய்தார்;
பொதிகைகளைப் பொதிந்தார்;
அவற்றிற்குப் பூண்கள் அமைத்தார்.
29 ஆரத்திக் காணிக்கையாக வந்த வெண்கலம்
இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து ஐந்து கிலோ கிராம் [8] ஆகும்.
30 அதைக்கொண்டு அவர் சந்திப்புக் கூடார நுழைவாயிலின் பாதப்பொருத்துகளையும்,
வெண்கலப் பலிபீடத்தையும்,
அதன் வெண்கல வலைப்பின்னலையும்,
பலிபீடத்திற்கான அனைத்துத் துணைக்கலன்களையும் செய்தார்.
31 மேலும் முற்றத்தைச் சுற்றியுள்ள பாதப்பொருத்துகள்,
முற்றத்தின் நுழைவாயிலிலுள்ள பாதப்பொருத்துகள்,
திருஉறைவிடத்தின் முளைகள்,
முற்றத்தைச் சுற்றியுள்ள முளைகள் ஆகிய அனைத்தையும் செய்தார்.


குறிப்புகள்

[1] 38:24 'இருபத்தொன்பது தலந்தும் எழுநூற்று முப்பது செக்கேலும்' என்பது எபிரேய பாடம்.
[2] 38:25 'நூறு தாலந்தும் ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேலும்' என்பது எபிரேய பாடம்.
[3] 38:26 'பெக்கா' என்பது எபிரேய பாடம்.
[4] 38:25-26 = விப 30:11-16.
[5] 38:26 = மத் 17:24.
[6] 38:27 'நூறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[7] 38:28 'ஆயிரத்து எழு நூற்று எழுபத்தைந்து செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[8] 38:29 'எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு செக்கேலும்' என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 39[தொகு]

குருக்களுக்கான உடைகள் செய்தல்[தொகு]

(விப 28:1-14)


1 நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறத் துகிலால் நெய்த
மெல்லிய ஆடைகள் தூயதலத் திருப்பணிக்காகச் செய்யப்பட்டன.
ஆண்டவர் மோசேக்கு அளித்த கட்டளைப்படி
ஆரோனுக்காகத் திருவுடைகள் செய்யப்பட்டன.
2 பொன்னையும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலையும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி
ஏப்போதை அவர் செய்தார்.
3 நீலம், கருஞ்சிவப்பு, சிவப்புநிற நூல்,
கலைத்திறனுடன் அமைந்த மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை அணிசெய்ய,
பொன்தகடுகளை அடித்து இழைகளாக வெட்டினார்.
4 ஏப்போதுக்கு இரு தோள்பட்டைகள் செய்து,
அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் இணைத்தார்.
5 ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை,
அதன் ஒரு பகுதியாகவும்,
அதைப்போன்றே கலை நுணுக்கத்துடன்
பொன்னாலும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும்,
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தயாரிக்கப்பெற்றது.
6 பன்னிற மணிக்கற்களுக்கு மெருகேற்றி
அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்தனர்.
இஸ்ரயேல் புதல்வரின் பெயர்களை அவற்றின்மேல்
முத்திரையாகப் பொறித்துப் பதித்தனர்.
7 ஏப்போதின் தோள்பட்டைமேல்
அவற்றை இஸ்ரயேல் புதல்வரின் நினைவுக் கற்களாக
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பொருத்தினர்.

மார்புப் பட்டை செய்தல்[தொகு]

(விப 28:15-30)


8 மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது.
அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.
9 மார்புப்பட்டை ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் என்று
சதுர வடிவமானதாயும் இரண்டாக மடிந்ததாயும் அமைந்தது.
10 அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதித்தனர்;
முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;
11 இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;
12 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;
13 நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல்.
இவையாவும் பொன்னிழைப் பின்புலத்தில் பதிக்கப்பட்டன.
14 இந்த கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப்
பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருந்தன.
அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம்
பன்னிரண்டு பெயர்களும் முத்திரை பொறிப்பதுபோல் வெட்டப்பட்டன.
15 மார்புப் பட்டைமேல் பொருத்துவதற்காகப்
பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப்
பசும்பொன்னால் செய்தனர்.
16 மேலும் பொன் பதக்கங்கள் இரண்டும்
பொன் வளையங்கள் இரண்டும் செய்தனர்.
பின்னர் அந்த இரு வளையங்களை
மார்புப் பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்தி,
17 இரு பொன் சங்கிலிகளையும்
மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டினர்.
18 சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டினர்.
இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, அதன் முன்புறமாய் பொருத்தினர்.
19 இரு பொன் வளையங்கள் செய்து,
அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில்,
உட்புற ஓரங்களில், ஏப்போதை அடுத்து இணைத்தனர்.
20 மேலும் இரு பொன் வளையங்கள் செய்து
அவற்றை ஏப்போதின் இரு தோள்பட்டைகளில் முன்பக்கம், கீழ்ப்பகுதியில்,
அது இணையும் இடத்தில்
ஏப்போதின் பின்னலழகுடைய இடைக் கச்சைக்கு மேலே கோர்த்துவிட்டனர்.
21 பின்னர் மார்புப் பட்டையின் வளையங்களை
ஏப்போதின் வளையங்களுடன் நீல நாடாவால் இணைத்தனர்.
இவ்வாறு மார்புப் பட்டை
ஏப்போதின் பின்னலழகு இடைக்கச்சையிலிருந்து அகலாமல்
ஏப்போதின் மேல் படிந்து நிற்கும்.
இதுவும் ஆண்டவர் மோசேக்கு கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

குருக்களுக்கான பிற உடைகள் செய்தல்[தொகு]

(விப 28:31-41)


22 அவர் ஏப்போதின் அங்கி முழுவதையும்
நீல நிறத்தில் நெசவு வேலைப்பாட்டுடன் செய்தார்.
23 அந்த அங்கியின் திறப்பைச் சுற்றிலும்,
மேலாடைகள் திறப்பில் அமைவது போன்று
நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரை அமைக்கப்பட்டது.
இதனால் அங்கி கிழியாதிருக்கும்.
24 அங்கியின் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும்
மாதுளைத் தொங்கல் செய்து விடப்பட்டது.
25 பசும்பொன்னால் மணிகள் செய்து
அம் மணிகளை அங்கியின் விளிம்பெங்கும் உள்ள
மாதுளைத் தொங்கல்களுக்கு இடையே இட்டனர்.
26 ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல்;
பின்னும் ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று
திருப்பணி அங்கியின் விளிம்பெங்கும் அமைந்திருந்தன.
இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது.


27 ஆரோனுக்காகவும் அவர் புதல்வருக்காகவும்
மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி தைக்கப்பட்டது.
28 மெல்லிய நார்ப்பட்டால் தலைப்பாகையும் தொப்பிகளும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் குறுங்கால் சட்டைகளும் செய்யப்பட்டன.
29 முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும்
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும்
பின்னல் வேலைப்பாட்டுடன் இடைக்கச்சை செய்யப்பட்டது.
இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது.


30 புனித மணிமுடிக்கான பட்டத்தைப் பசும் பொன்னால் செய்து,
அதன் மேல் ""ஆண்டவருக்கு அர்ப்பணம்" என்று
முத்திரைபோல் பொறித்து வைத்தனர்.
31 அது ஒரு நீல நாடாவால் தலைப்பாகையின் மேல் இணைக்கப்பட்டது.
இதுவும் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

கூடார வேலை நிறைவுபெறுதல்[தொகு]

(விப 35:10-19)


32 சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட வேலையெல்லாம் முடிவடைந்தது.
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே
இஸ்ரயேல் மக்கள் செய்து முடித்திருந்தனர்.
33 மோசேயிடம் கொண்டுவரப்பட்டவை:
திருஉறைவிடக் கூடாரம், அதன் அனைத்துத் துணைக்கலன்கள்,
கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள்,
தூண்கள், பாதப்பொருத்துகள்.
34 செந்நிறமாகப் பதனிட்ட செம்மறிக்கிடாய்த் தோல்விரிப்புகள்,
வெள்ளாட்டுத் தோல்விரிப்புகள்,
திருத்தூயகத் தொங்கு திரை,
35 உடன்படிக்கைப் பேழை, அதன் தண்டுகள்,
இரக்கத்தின் இருக்கை,
36 மேசை, அதன் அனைத்துத் துணைக்கலன்கள்,
திருமுன்னிலை அப்பம்,
37 பசும்பொன் விளக்குத்தண்டு, அதில் வரிசையாக அமைந்த அகல்கள்,
அதன் அனைத்துத் துணைக்கலன்கள், விளக்குக்கான எண்ணெய்,
38 பொன் பீடம், திருப்பொழிவு எண்ணெய்,
நறுமணத்தூபம், கூடார நுழைவாயிலின் தொங்கு திரை,
39 வெண்கலப் பலிபீடம்,
அதன் வெண்கல வலைப்பின்னல், அதன் தண்டுகள்,
அதன் அனைத்துத் துணைக்கலன்கள்,
நீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
40 முற்றத்தின் தொங்கு திரைகள், அதன் தூண்கள்,
பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலுக்கான தொங்கு திரை,
பூண்கள், முளைகள்,
சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத் திருப்பணிக்குத் தேவையான
அனைத்துத் துணைக்கலன்கள்,
4 தூயகத்தில் பணிபுரிவதற்கான அழகுறப் பின்னப்பட்ட உடைகள்,
குருவாகிய ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும்
குருத்துவப் பணி புரிவதற்கான திருவுடைகள் ஆகியவை.
42 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி
இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் நுணுக்கமாகச் செய்து முடித்திருந்தனர்.
43 மோசே எல்லா வேலைகளையும் பார்வையிட்டார்.
ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே
அவை யாவும் செய்யப்பட்டிருந்தன.
மோசே அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

அதிகாரம் 40[தொகு]

கூடாரத்தை எழுப்புதலும் அர்ப்பணமும்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
2 "முதல் மாதத்தில், முதல் நாள்,
சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத்தை நீ எழுப்புவாய்.
3 அங்கே உடன்படிக்கைப் பேழையை வைத்து
அதனைத் திருத்தூயகத் திரையால் மறைத்துவிடு.
4 பின்னர் மேசையைக் கொண்டுவந்து, உரியவாறு ஒழுங்குபடுத்து.
மேலும் விளக்குத் தண்டினைக் கொண்டுவந்து அதன் அகல்களை ஏற்று.
5 உடன்படிக்கைப் பேழைக்கு முன்பக்கம் பொன்தூப பீடத்தை வை.
திருஉறைவிட நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
6 சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட நுழைவாயிலுக்கு முன்புறம்
எரிபலி பீடத்தை வை.
7 சந்திப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் இடையில்
தண்ணீர்த் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிவை.
8 சுற்றிலும் முற்றம் அமைத்து,
முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
9 திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத்
திருஉறைவிடத்திற்கும் அதிலுள்ள அனைத்திற்கும் திருப்பொழிவு செய்.
அதனை அதன் அனைத்துத் துணைக்கலன்களோடுஅர்ப்பணிப்பாய்.
இவ்வாறு அது புனிதம் பெறும்.
10 எரிபலி பீடத்திற்கும்
அதன் அனைத்துத் துணைக்கலன்களுக்கும் திருப்பொழிவு செய்து,
அப்பீடத்தை அர்ப்பணிப்பாய்.
இவ்வாறு பலிபீடம் மிகப் புனிதமானதாக விளங்கும்.
11 தண்ணீர்த் தொட்டிக்கும்,
அதன் ஆதாரத்திற்கும் திருப்பொழிவு செய்து, அர்ப்பணிப்பாய்.
12 சந்திப்புக் கூடார நுழைவாயிலின் அருகில்
ஆரோனையும் அவன் புதல்வரையும் வரச்செய்து,
அவர்களைத் தண்ணீரால் கழுவு.
13 ஆரோன் எனக்குக் குருத்துவப் பணியாற்றும்படி
அவனுக்குத் திருவுடைகள் அணிவித்து,
அவனுக்கு அருள்பொழிவு செய்து,
அவனைத் திருநிலைப்படுத்து.
14 அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து,
அவர்களுக்கும் உடைகள் உடுத்துவிப்பாய்.
15 அவர்களின் தந்தைக்கு அருள்பொழிவு செய்தது போலவே,
எனக்குக் குருத்துவப் பணியாற்றும்படி
அவர்களுக்கும் அருள்பொழிவு செய்.
அவர்களின் அருள்பொழிவு
தலைமுறைதோறும் நிலைநிற்கும் குருத்துவமாக விளங்கும்."


16 மோசே அவ்வாறே செய்தார்.
ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செயல்பட்டார்.
17 இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று
திருஉறைவிடம் எழுப்பப்பட்டது.
18 மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்;
பாதப்பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார்.
குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்;
தூண்களையும் நிறுத்தினார்.
19 திருஉறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்;
அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார்.
இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
20 உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து,
அதைப் பேழையில் வைத்தார்.
தண்டுகளைப் பேழையில் செருகினார்.
இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார்.
21 திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது.
திருத்தூயகத்திரை தொங்கவிடப்பட்டு,
உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது.
இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.
22 சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் வடபுறம்,
திருத்தூயகத் திரைக்கு வெளியே அவர் மேசையை வைத்தார்.
23 அதன் மேல் ஆண்டவர்முன் திருமுன்னிலை அப்பத்தை
அவர் முறைப்படி வைத்தார்;
இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
24 சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் தென்புறம்,
மேசைக்கு எதிரே, விளக்குத் தண்டை நிறுத்தினார்.
25 ஆண்டவர் திருமுன் அகல்களை ஏற்றினார்.
இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
26 சந்திப்புக் கூடாரத்தில்
திருத்தூயகத் திரைக்கும் முன்னே பொன்பீடத்தை வைத்தார்.
27 அதில் நறுமணத் தூபம் எரித்தார்.
இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
28 திருஉறைவிடத்தின் நுழைவாயிலில்
திரை தொங்கவிடப்பட்டது.
29 அவர் சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட நுழைவாயிலின் முன்
எரிபலி பீடத்தை வைத்தார்.
அதன்மேல் அவர் எரிபலியும் உணவுப் படையலும் செலுத்தினார்.
இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
30 சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில்
தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டது.
கழுவுவதற்காகத் தண்ணீர் அதில் ஊற்றி வைக்கப்பட்டது.
31 இது மோசேயும், ஆரோனும்,
அவர் புதல்வரும் கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்வதற்கே.
32 சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போதும்,
பலிபீடத்தை அணுகும்போதும் அவர்கள் கழுவிக் கொள்வர்.
இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
33 திருஉறைவிடம், பலிபீடம் இவற்றைச் சுற்றி எங்கும் அவர் முற்றம் அமைத்தார்.
முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிட்டார்.
இவ்வாறு மோசே தம் பணியை முடித்துக்கொண்டார்.

கூடாரத்தின் மேல் ஆண்டவரின் மாட்சி[தொகு]

(எண் 9:15-23)


34 பின்பு, மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று;
ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. [*]
35 சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும்,
ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும்
மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
36 இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும்,
மேகம் திரு உறைவிடத்தைவிட்டு எழும்பும் போதெல்லாம்
புறப்பட்டுச் செல்வார்கள்.
37 மேகம் எழும்பாதிருக்கும் போதோ,
அது மேலே எழும்பும் நாள்வரை,
அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
38 ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும்
திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும்,
இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும்
இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.


குறிப்பு

[*] 40:34 = 1 அர 8:10-11; எசா 6:4; எசே 43:4-5; திவெ 15:8.


(விடுதலைப் பயணம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை