பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

139


{மணக்குடவர் உரை) தான் பிறந்த குடிக்குத் தக்கவொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினையுடையவள் இல்வாழ்க்கைக்குத் துணையாவாள்.

(பரிமேலழகர் உரை) மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை யுடையளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை யுடையாள் அதற்குத் துணை.

(விளக்கவுரை) வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு இந்தக் குறளில் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. என்ன? ஒருவனுக்கு மனைவிதான் வாழ்க்கைத்துணையா? அவன் தாய் தந்தையர் என்ன ஆவது? அவன் உடன் பிறந்தார்கள் என்ன ஆவது? உற்றார் உறவின்முறையார் ஊரார் உலகத்தார் என்ன ஆவது? இவர்கள் எல்லாம் இருக்க நேற்றுவந்த பெண்டாட்டி - வாழ்க்கைத் துணையாகி விடுவாளா? அவளுக்கு அவ்வளவு பெரியபேரா? ஆம், அவளே வாழ்க்கைத்துணை. தாய் தந்தையரோ இறுதிவரை இருப்பதில்லை. இருக்கும்போதும் அவர்களது அன்பு பல பிள்ளைகளுக்கும் பங்கிடப்படுகிறது. உடன்பிறந்தார்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவரவர்கட்கும் தனிக்குடும்பம் உண்டாகிவிட்டால், அதன் பிறகு அண்ணனாவது. தம்பியாவது! அண்டை வீட்டுக்காரனே மேல். உற்றார் - உறவின் முறையார், ஊரார் - உலகத்தாரோ, வாழ்ந்தாலும் பொறுக்கமாட்டார்கள் - தாழ்ந்தாலும் மதிக்கமாட்டார்கள். நண்பரோ, மனைவியோடு அவர் போய்க்கொண்டிருக்கும் போது ஏறிட்டுப் பார்க்கமாட்டேன் என்கிறார் - சில சமயம் தெருவாயிற்படியோடு நிற்கவைத்துப் பேசியே வழியனுப்பி விடுகிறார். பிள்ளைகளுக்குள் பெண்பிள்ளைகளோ, அகப்பட்டவரையும் சுருட்டிக்கொண்டு அயலார் சொத்தாய்ப் போய்