128 அம்பிகாபதி காதல் காப்பியம்
காரணங் கூறுகெனக் காதலி வினவ,
ஆரணங் கேயுன் னழகிய பளிங்குக்
கன்னத்தில் என்முகம் காண்கிறே னாதலின்
105 இன்னும் அசையா திருந்திடு! மற்றும்,
பாங்குள பளிங்குக் கற்கள் தமக்கே
ஈங்கு நின் கன்னம் ஈயும் பேரொளி;
அதோவுள முத்தால் ஆயதொங் கற்கே
இதோவுன் பற்கள் இலங்கொளி ஈந்திடும்;
110 ஈங்குள பவளச் சிலைக்குன் இதழ்கள்
ஓங்கு செந்நிற ஒளியை மிகுக்கும்;
யாங்ஙனம் மொழிவதுன் நலங்கள் யாவையும்
என்றவன் கூற, ஏந்திழை நாணி,
இத்தகு கிண்டலை இனியான் பொறேஎன்;
115 வித்தையா யுள்ளது விளம்புமும் கற்பனை;
என்று மொழிய இருவரும் நகைத்தபின்,
ஆங்கொரு பக்கல் அமைவுறு யாழினை
வீங்கு புகழோன் விருப்பொடு கண்டதைக்
கண்டு கனிமொழி பாடக் கருதினள்;
120 எத்தகு குற்றமும் இல்லா யாழினை
மெத்தெனும் கையால் மெல்ல எடுத்துக்
காந்தளை வென்ற கைவிரல் தம்மால்
ஏந்திசை யாழின் நரம்பினை இயக்கிப்
பண்ணல் பரிவட்டணைமுத லாய
125 எண்வகைத் தொழிலால் இசையினை எழுப்பிப்
பண்வகைக் குற்றம் படாஅமல் பாடுவாள்:
108. தொங்கல் - மாலை.109.இலங்குஒளி - விளங்கும் ஒளி. 110.இதழ்கள் - உதடுகள்.118.ஏந்திழை - அமராவதி. 118. வீங்கு - மிகுந்த. 119. கனிமொழி - அமராவதி. 124. பண்ணல், பரிவட்டணை - இசைக்கலைச் செயல்வகைகள். 126. படாஅமல் - உண்டாகாதபடி (உயிரளபெடை)