பக்கம்:அருளாளர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் - 71

பேசும் மக்கள் சமுதாயத்தில், ஓடாமல் நின்று கொண்டிருப்பவர்கள், தமக்கு மிகச் சமீபத்தில் நடைபெற்ற இந்தக் காரியத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்களாம். 'நின்றார் அறியாவண்ணம்’ என்ற சொற்களால் இந்தப் புதுமையைத்தான் ஆழ்வார் பேசுகின்றார். இவ்வாறு கூறுவதால் அம்மாயக் கள்வனுடைய மாயை யின் சிறப்பைக் கூறியவாறாயிற்று. பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர்கள்கூட அறியாவண்ணம் ஆழ்வாரின் உள் புகுந்தானாம் அக்கள்வன் என்பன அவன் மாயம்

இருந்தவாறு.

 அவன் உள் நுழைந்ததைத் தான் அறியவில்லை என்றாலும் ஆழ்வாரின் உள் புகுந்த அவன் விளைத்த செயல்களையாவது அறிந்தார்களா என்றால் அதுவும் இல்லையாம். ஆழ்வாரின் நெஞ்சும் உயிரும் அதுவரை தனித்தன்மையோடு இருந்திருக்குமாம்! அவற்றுடன் நன்கு பழகிய அயல் நின்றவர்கள் இப்பொழுது அந்த உயிரும் நெஞ்சும் அடைந்த மாற்றத்தையேனும் கண்டார்களா! வந்தவன் நெஞ்சு, உயிர் என்ற இரண்டினிடத்தும் உள் கலந்து விட்டானாமே. அவ்வாறு கலந்த பின்னர் எவ்வளவுதான் உள்ளே கலந்தாலும் கலக்கப் பெற்ற பிறகு அந்த நெஞ்சும் உயிரும் பிறிதொரு தன்மையை அடைந்திருக்குமே அதையாவது அயல் நின்றார் கண்டார்களா? காணவில்லை என்றே பெரியார் பேசுகிறார். அதுவும் அம்மாயக் கள்வனின் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
வஞ்சக் கள்வனும் மாமாயனுமாகிய அவன் நம் நெஞ்சிலும் உயிரிலும் உள் கலக்கிறான் என்பதை அறிந்தும், அவ்வாறு அவன் கலப்பதைப் பிறர் அறியவில்லை என்பதை அறிந்தும் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் ஆழ்வார் இருந்துவிட்டார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/80&oldid=1291559" இலிருந்து மீள்விக்கப்பட்டது