திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 42 முதல் 43 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோசேப்பும் அவர்தம் உடன்பிறப்புகளும் சந்தித்தல் (தொநூ 45). ஓவியர்: லியோன் பூர்சுவா. 1863. பிரான்சு.

தொடக்க நூல்[தொகு]

அதிகாரங்கள் 42 முதல் 43 வரை

அதிகாரம் 42[தொகு]

யோசேப்பின் சகோதரர் தானியம் வாங் எகிப்திற்கு வருதல்[தொகு]


1 எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி
யாக்கோபு கேள்விப்பட்டு,
தம் புதல்வர்களை நோக்கி,
"நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?
2 இதோ எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறேன்.
நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரோடிருக்குமாறு,
நீங்கள் அங்குச் சென்று நமக்கெனத்
தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்" என்றார். [1]
3 எனவே யோசேப்பின் சகோதரர் பதின்மரும்
தானியம் வாங்கும் பொருட்டு எகிப்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்.
4 ஆனால் யோசேப்பின் சகோதரனான பென்யமினை
அவனுடைய சகோதரர்களோடு யாக்கோபு அனுப்பவில்லை.
ஏனெனில், அவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிடக்கூடும் என்று எண்ணினார்.
5 கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால்,
அங்கிருந்து தானியம் வாங்கச்சென்ற மற்றவர்களோடு
இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர்.


6 அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து
மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார்.
எனவே அவருடைய சகோதரர்கள் வந்து,
தரைமட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள்.
7 யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார்.
ஆயினும் அவர்களை அறியாதவர்போல்
கடுமையாக அவர்களிடம் பேசி,
'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று வினவினார்.
அவர்களோ, 'நாங்கள் கானான் நாட்டிலிருந்து
உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம்'
என்று பதில் கூறினார்கள்.
8 யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்ட போதிலும்,
அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. br>9 அப்பொழுது தாம் அவர்களைப் பற்றிக் கண்ட
கனவுகளை நினைவில் கொண்டு, அவர்களை நோக்கி,
"நீங்கள் ஒற்றர்கள்;
பாதுகாப்பாற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன
என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீர்கள்" என்றார். [2]
10 அதற்கு அவர்கள்,
"எம் தலைவரே! அப்படி அல்ல.
உம் ஊழியர்களாகிய நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்கவே வந்துள்ளோம்.
11 நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள்.
நாங்கள் நேர்மையானவர்கள்; ஒற்றர்கள் அல்ல" என்றனர்.
12 அவர்களிடம் அவர், "இல்லை, இல்லை.
பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன
என்று ஆராய்ந்து பார்க்க வந்தவர்களே நீங்கள்" என்று சொன்னார்.
13 அவர்கள் மறுமொழியாக
"உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும்
ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள்.
இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான்.
இன்னொருவன் இறந்துவிட்டான்" என்றனர்.
14 யோசேப்பு மீண்டும் அவர்களிடம்,
"நான் சொன்னது போலவே நீங்கள் ஒற்றர்கள்தாம்.
15 இதோ நான் உங்களை சோதித்தறியப் போகிறேன்.
பார்வோனின் உயிர்மேல் ஆணை!
உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய,
நீங்கள் இங்கிருந்து புறப்படப்போவதில்லை.
16 எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி
உங்களில் ஒருவனை அனுப்புங்கள்.
மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
உங்கள் சொற்களைச் சோதித்து
உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன்.
இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை!
நீங்கள் ஒற்றர்கள்தாம்" என்றார்.
17 பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார்.


18 மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி,
"நான் சொல்கிறபடி செய்யுங்கள்;
செய்தால், பிழைக்கலாம்.
ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன்.
19 நீங்கள் குற்றமற்றவர்களானால்
சகோதரராகிய உங்களில் ஒருவன்
சிறைச்சாலையில் அடைபட்டிருக்கட்டும்.
மற்றவர்கள் புறப்பட்டு,
பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம்.
20 உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்.
அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும்.
நீங்களும் சாவுக்குள்ளாகமாட்டீர்கள்" என்றார்.
அவர்களும் அப்படியே செய்தனர்.
21 அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம்,
"உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே
இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம்.
தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன்
நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்!
நாமோ அவனுக்குச் செவி சாய்க்கவில்லை!
நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்"
என்று சொல்லிக் கொண்டனர்.
22 அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம்,
"பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று
உங்களுக்கு நான் சொல்லவில்லையா?
நீங்களோ செவிகொடுக்கவில்லை.
இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது என்றார். [3]
23 யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால்,
தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.
24 அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார்.
பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில்
சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.

யோசேப்பின் சகோதரர் கானானுக்குத் திரும்பிச் செல்லல்[தொகு]


25 பின்பு, அவர்களுடைய கோணிப்பைகளைத் தானியத்தால் நிரப்பி,
அவனவன் பணத்தைத் திரும்ப அவனவன் பையிலிட்டுக் கட்டவும்,
வழிக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.
அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
26 அவர்கள் தங்கள் கழுதைகளின் மேல்
தானியத்தை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
27 பின்பு, அவர்களில் ஒருவன்
சாவடியில் தன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத்
தன் கோணியைத் திறக்கவே,
அதன் வாயில் தன் பணம் இருக்கக் கண்டான்.
28 அவன் தன் சகோதரரை நோக்கி,
"என் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது;
இதோ என் கோணியில் இருக்கிறது" என்றான்.
அவர்களோ மனக்கலக்கமுற்று, நடுநடுங்கி,
ஒருவரோடொருவர், "கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?" என்றனர்.


29 பின்பு, அவர்கள் கானான் நாட்டில்
தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்து,
தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர்.
30 அவர்கள் கூறியது:
"அந்நாட்டின் தலைவர் எங்களிடம் கடுமையாகப் பேசினார்.
நாட்டை வேவு பார்க்கவந்தவர்கள் போல் எங்களை நடத்தினார்."
31 நாங்களோ அவரைப் பார்த்து,
"நாங்கள் நேர்மையானவர்கள்; ஒற்றர்கள் அல்ல.
32 நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரு சகோதரர்.
ஒருவன் இறந்துவிட்டான்.
இளையவன் கானான் நாட்டில்
இப்பொழுது எங்கள் தந்தையோடு இருக்கிறான்" என்று சொன்னோம்.
33 அப்பொழுது, நாட்டின் தலைவரான அந்த ஆள்,
"நீங்கள் நேர்மையானவர்கள்தாம் என்பதை நான் அறிந்துகொள்ள
உங்கள் சகோதரர்களுள் ஒருவனை என்னிடம் விட்டுச்செல்லுங்கள்.
பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்கு வேண்டியவற்றை
வாங்கிக் கொண்டு போங்கள்.
34 ஆனால், உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்.
அதன் மூலம் நீங்கள் ஒற்றர்கள் அல்ல,
நேர்மையானவர்கள்தாம் என்று நானும் அறிந்துகொள்வேன்.
அதன்பின் உங்கள் சகோதரனை உங்களிடம் ஒப்படைப்பேன்;
பின்னர் நீங்கள் நாடெங்கும் வணிகம் செய்யலாம் என்றார்."


35 பின்பு, அவர்கள் கோணிப் பைகளைத் திறந்து கொட்டியபொழுது,
ஒவ்வொருவன் கோணிப்பையிலும் அவனவன் பணமுடிப்பு காணப்பட்டது.
பணமுடிப்புகளைக் கண்டு அவர்களும் அவர்கள் தந்தையும் திகிலுற்றனர்.
36 தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி,
"என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள்.
யோசேப்பு இல்லை, சிமியோனும் இல்லை;
இப்பொழுது பென்யமினையும் கூட்டிக்கொண்டு போகவிருக்கிறீர்களே!
எல்லாமே எனக்கு எதிராக உள்ளன!" என்றார்.
37 அதற்கு ரூபன் தம் தந்தையிடம்,
"நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில்,
என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள்.
அவனை என் கையில் ஒப்புவியுங்கள்.
நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்" என்றார்.
38 ஆனால் யாக்கோபு,
"என் மகனை உங்களோடு போகவிடமாட்டேன்.
இவன் சகோதரன் இறந்து போனான்.
இவன் ஒருவனே எஞ்சி இருக்கிறான்.
நீங்கள் போகும் வழியில், இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால்,
நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப்
பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்" என்றார்.


குறிப்புகள்

[1] 42:2 = திப 7:12.
[2] 42:9 = தொநூ 37:5-10.
[3] 42:22 = தொநூ 37:21-22.


அதிகாரம் 43[தொகு]

பென்யமின் எகிப்துக்குச் செல்லல்[தொகு]


1 நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது.
2 எகிப்திலிருந்து வாங்கி வந்திருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன.
அவர்கள் தந்தை அவர்களை நோக்கி,
"நீங்கள் திரும்பிப் போய் நமக்குக் கொஞ்சம்
உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்" என்றார்.
3 அதற்கு யூதா,
"அந்த ஆள் உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்து வராவிடில்
நீங்கள் என் முகத்தில் விழிக்க வேண்டாம்
என்று எங்களைக் கடுமையாய் எச்சரித்துள்ளார்.
4 ஆதலால் நீங்கள் எம் சகோதரனை எங்களோடு அனுப்பினால் மட்டுமே
நாங்கள் அங்குச் சென்று உணவுப் பொருள்களை
உங்களுக்கு வாங்கிக்கொண்டு வருவோம்.
5 நீங்கள் அவனை அனுப்பாவிடில், நாங்கள் போகமாட்டோம்.
ஏனெனில் அந்த ஆள்,
'உங்கள் சகோதரன் உங்களுடன் வராவிடில்,
நீங்கள் என் முகத்தில் விழிக்கவேண்டாம்' என்று சொல்லிவிட்டார்" என்று சொன்னார்.
6 இஸ்ரயேல் அவர்களை நோக்கி,
"உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான்
என்று அம்மனிதருக்குத் தெரிவித்து,
நீங்கள் ஏன் எனக்குத் துன்பம் வருவித்தீர்கள்" என்று முறையிட்டார்.
7 அவர்கள், "அந்த ஆள் நம்மைப் பற்றியும்
நம் உறவினரைப் பற்றியும் துருவித் துருவிக் கேட்டார்.
"உங்கள் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா?
உங்களுக்கு வேறு சகோதரன் உண்டா? என்று வினவினார்.
அவர் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தோம்.
'உங்கள் சகோதரனை இங்கே கொண்டு வாருங்கள்'
என்று அவர் சொல்வார் என்று நாங்கள் அறிந்திருக்கக் கூடுமோ?"
என்று மறுமொழி கூறினர்.
8 மேலும் யூதா தம் தந்தை இஸ்ரயேலை நோக்கி,
"எங்கள் குழந்தைகளும், நீங்களும் நாங்களும்
சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமானால்,
இளைஞனை என்னோடு அனுப்பி வையுங்கள்.
நாங்களும் புறப்பட்டுச் செல்வோம்.
9 அவனுக்கு நானே பொறுப்பாளி.
அவனைப்பற்றிய பொறுப்பை என்கையில் விட்டுவிடுங்கள்.
நான் அவனை உங்களிடம் கொண்டுவந்து ஒப்புவிக்காவிடில்,
உங்களுக்கு முன்பாக, அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்.
10 இவ்வளவு காலந்தாழ்த்தியிராவிட்டால்,
இதற்குள் இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருக்கலாம்" என்றார்.
11 அதைக் கேட்டு, அவர்களின் தந்தை இஸ்ரயேல், அவர்களை நோக்கி,
"அவ்வளவு அவசியமானால், நீங்கள் அப்படியே செய்யுங்கள்.
ஆனால், இந்த நாட்டின் விளைச்சலில் மிகச் சிறந்த சிலவற்றை
உங்கள் பைகளிலே எடுத்துச் செல்லுங்கள்.
கொஞ்சம் தைல வகைகள், தேன்,
நறுமணப் பொருள்கள், வெள்ளைப் போளம்,
தேவதாருக் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை
அம்மனிதருக்குக் காணிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
12 மேலும் இருமடங்கு பணத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கோணிப்பை வாயில் வைக்கப்பட்டிருந்த பணத்தை
நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்.
ஒரு வேளை அது தவறுதலாய் நேர்ந்திருக்கக்கூடும்.
13 உங்கள் சகோதரனை அழைத்துக்கொண்டு
மீண்டும் அந்த மனிதரிடம் செல்லுங்கள்.
14 அந்த மனிதர் ஏற்கெனவே அங்குள்ள உங்கள் சகோதரனையும்
இந்தப் பென்யமினையும் உங்களோடு அனுப்பிவைக்கும்படி
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கருணை காட்டுவாராக!
நானோ பிள்ளைகளை இழக்கவேண்டியிருந்தால்,
பிள்ளைகளை இழந்தவனாகவே இருப்பேன்" என்றார்.
15 அவர்களும் மேற்குறிப்பிட்ட காணிக்கைகளையும்
இருமடங்கு பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு
பென்யமினுடன் எகிப்திற்குச் சென்று
யோசேப்பின் முன்னிலையில் வந்து நின்றனர்.


16 யோசேப்பு அவர்களையும்
அவர்களுடன் பென்யமினையும் கண்டவுடன்
தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி,
"நீ இம்மனிதர்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல்.
இவர்கள் பகலுணவை இன்று என்னோடு உண்பார்கள்.
கால்நடை ஒன்றை அடித்து உணவு தயார் செய்" என்றார்.
17 அவனும் யோசேப்பு சொன்னபடியே அம்மனிதர்களை
அவர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான்.
18 யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால்
அவர்கள் அச்சமுற்றனர்.
ஏனெனில், 'முன்பு நம் கோணிப்பைகளில் வைக்கப்பட்ட
பணத்தை முன்னிட்டே இங்குக் கொண்டுவரப்பட்டுள்ளோம்.
நம்மைத் தாக்கி மடக்கி அடிமைகளாக்கி
நம் கழுதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு
இவ்வாறு கொண்டுவந்திருக்கிறார்களோ?' என்று நினைத்துக் கொண்டனர்.
19 எனவே, அவர்கள் யோசேப்பின் வீட்டு வாயிற்படியிலே
மேற்பார்வையாளனை அணுகிக் கூறியது:
20 "ஐயா, முன்பு ஒருமுறை நாங்கள் தானியம் வாங்குவதற்கு
இங்கு வந்திருந்தது உண்மையே.
21 திரும்பும் வழியில் சாவடியில் எங்கள் கோணிப்பைகளைத் திறந்தபோது,
பைகளின் வாயிலே நாங்கள் கொடுத்த பணம் அப்படியே இருக்கக் கண்டோம்.
அதே அளவு திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.
22 மேலும், எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு
வேறு பணமும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.
நாங்கள் முன் கொடுத்த பணத்தை
எங்கள் கோணிப்பைகளில் வைத்தது யாரென்று அறியோம்" என்றனர்.
23 அதற்கு அவன், "உங்களுக்கு அமைதி உண்டாகுக!
அஞ்சவேண்டாம்!
உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர்
உங்கள் கோணிப்பைகளில் அந்தப் பணத்தை
உங்களுக்குப் புதையலாகத் தந்திருப்பார்!
உங்கள் பணம் தான் என்னிடம் வந்ததே!" என்று சொல்லியபின்,
சிமியோனை அவர்களிடம் அழைத்து வந்தான்.
24 மேலும், அந்த மனிதன் அவர்களை
யோசேப்பின் வீட்டிற்குள் அழைத்துச் சென்று,
அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான்.
அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவிக் கொண்டனர்.
பின்பு, அவர்களுடைய கழுதைகளுக்கு அவன் தீனி போட்டான்.
25 நண்பகலில் யோசேப்பு வரும் நேரத்தில்,
அவருக்குத் தருவதற்காக அவர்கள்
தங்கள் காணிக்கைகளைத் தயார் செய்தனர்.
ஏனென்றால், தாங்கள் அங்கேயே
உணவு அருந்தப்போவதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.


26 யோசேப்பு தம் வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்குள் அவர்கள் கையில் கொண்டுவந்திருந்த
காணிக்கைகளை அவர்முன் வைத்து,
தரை மட்டும் தாழ்ந்து வணங்கினர்.
27 அவரோ அவர்களிடம் நலம் விசாரித்தபின்
"நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர்வயதான உங்கள் தந்தை
நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா?" என்று விசாரித்தார்.
28 அவர்கள், "உங்கள் ஊழியராகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார்.
இன்னும் உயிரோடிருக்கிறார்" என்று பதில் கூறித் தரைமட்டும் தாழ்ந்து வணங்கினர்.
29 யோசேப்பு கண்களை உயர்த்தி,
தம் சகோதரனும், தம் தாயின் மகனுமான பென்யமினைப் பார்த்து,
"நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த
உங்கள் இளைய சகோதரன் இவன்தானோ?" என்று கேட்டபின்,
"மகனே, கடவுள் உனக்கு அருள்புரிவாராக!" என்றார்.
30 யோசேப்பு தம் சகோதரனைக் கண்டதும்
மனம் நெகிழ்ந்து அழுவதற்கு ஓரிடம் தேடினார்.
உடனே தம் உள்ளறைக்குள் விரைந்துசென்று கண்ணீர்விட்டார்.
31 பின்பு, முகத்தைக் கழுவியபின் வெளியே வந்தார்.
தம்மை அடக்கிக்கொண்டு, 'உணவு பரிமாறுங்கள்' என்றார்.
32 யோசேப்பிற்குத் தனியாகவும்
சகோதரர்களுக்குத் தனியாகவும்
அவருடன் உண்ணவிருந்த எகிப்தியருக்குத் தனியாகவும்
உணவு பரிமாறப்பட்டது.
ஏனென்றால், எகிப்தியர் எபிரேயரோடு உண்பதில்லை.
அப்படி உண்பதை எகிப்தியர் அருவருப்பாகக் கருதினர்.
33 மேலும் அவருக்கு முன் அவர்களில் மூத்தவன்
தலைமகன் உரிமைப்படி முதலாவதாகவும்,
இளையவர்கள் அவரவர் வயதின்படியும் அமர்த்தப்பட்டதால்
ஒருவர் மற்றவரை வியப்புடன் நோக்கினர்.
34 யோசேப்பின் முன் வைக்கப்பட்ட தட்டுகளினின்று
அவர்களுக்குப் பரிமாறப்பட்டது.
மற்றவர்களது பங்கைப்போல் ஐந்து மடங்கு மிகுதியாகப்
பென்யமினுக்குப் பரிமாறப்பட்டது.
அவருடன் அவர்கள் மதுவருந்தி விருந்துண்டனர்.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 44 முதல் 45 வரை