பக்கம்:ஏலக்காய்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கேடு அடையும். ஏப்ரலில் முதல் கோடைமழை பெய்ததும் தோன்றும் இவ்வியாதி, ஜூன் - ஜூலையில் உச்சம் அடையும். நோய்க்கான அடையாளங்களாக, தண்ணிரில் நனைந்து ஊறிய மாதிரி இலைகளிலே புள்ளிகள் சிறுகச் சிறுகத் தோன்றும்; பின்னர், இவை படிப்படியாகப் பெரிதாகி, இறுதியில் ஒட்டுப் போட்ட பாவனையில் அலங்கோலமாக அழுகி விடும். புள்ளிகள் உருவான பகுதிகள் அப்புறம் துவாரங்களாக மாறி விடவும் நேரும். கடைசியில், அந்த இலைகள் உதிர வேண்டியதுதானே?

'காஃப்டஃபோல் - டிஃபால்டன்' என்ற இரசாயன முறை மருந்துக் கலவையை ஜூன் மாதத்திலிருந்து மாதம் இரண்டுதடவைகளாகத் தொடர்ந்து தெளித்தால், இலைப் புள்ளி கட்டுப்படும்; கட்டுப்படுத்தப்படும்.


கட்டே நோய்

இந்திய நாட்டில், ஏலம் விளைகின்ற பெரும்பாலான விவசாயத் தோட்டப் பண்ணைகளிலே செடிகளைத் தொற்றிப்பற்றும் நச்சுத்தன்மை கொண்ட செடிப்பேன்களால் பரவக்கூடிய 'கட்டே' எனப்படும் இந்த நச்சு நோய் மிகவும் பயங்கரமானது மட்டுமல்ல, மிகவும் கொடியதும் கூட! – சாகுபடிப் பக்கங்கள் எல்லாவற்றிலுமே பரவலாகவே வியாபிக்கும் குணம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஏலச்செடிகள், வயதின் வளர்ச்சியை அடைகின்ற எல்லாக் கட்டங்களிலுமே அவை 'கட்டே' நோயால் பீடிக்கப்படும். தளிர் இலைகளின் நடுநரம்பிலிருந்து ஓரங்கள் வரை, மெலிந்த - வெளுத்த பச்சை நிறக் கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாகவும் வரிவரியாகவும் இந்நோய் அடையாளமிட்டுத் தென்படும். நோய் முற்றினால், வளர்ந்து முதிர்ந்த இலைகளின் மேலே பளிங்கு போன்ற பல வண்ணப் பட்டைகள் உருவாகிப் பரவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/53&oldid=505962" இலிருந்து மீள்விக்கப்பட்டது