பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

சாயங்கால மேகங்கள்

"வேறு விதமாகப் பார்ப்பதற்கு அது இன்னும் பழக்கப் படவில்லை. பக்குவமோ, நாகரிகமோ அடையவும் இல்லை.”

“உலகம் காதலிப்பவர்களைப் பொறுத்துக் கொள்கிறது. மன்னிக்கிறது. கடைசியாக ஏற்கவும் செய்கிறது. நேரடியாக உடனே ஏற்றுக் கொண்டுவிடத் துணிவதில்லை.......”

“நாம் நெருங்கிப் பழகுகிறோம். காதலர்களின் சராசரி அசட்டுத்தனங்கள் அல்லது சேஷ்டைகளில் கூட நமக்கு அக்கறையில்லை. ஆனால் நம்மையும் பழகிய தராசில் அவர்கள் ஏற்கனவே நிறுத்துப் பழகிய விதத்தில்தான் நிறுக்கிறார்கள். நாம் அப்படி இருக்கிறோமோ இல்லையோ என்பது ஒரு புறமிருக்க அவர்கள் அப்படி நிறுத்தே பழகியிருக்கிறார்கள் என்பதுதான் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.”

இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் சித்ரா மெளனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப்பார்வையில் எவ்வளவோ அர்த்தங்களும், கேள்விகளும், பதில்களும், தகவல்களும் இருந்தன. பூமிக்கும் அவை புரிந்தன. சில விநாடிகள் தயங்கிய பின் அவன் உறுதியாக அவளுக்குச் சொன்னான்.

“மற்றவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்வதைப் பற்றியோ, புரிந்து கொள்ளாமலே இருப்பதைப் பற்றியோ நான் கவலைப் படவில்லை. ஆனால் நமக்குள் ஒருவரை ஒருவர். சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகப் பெருமை படுகிறேன்.”

“அதனால்தான் முத்தக்காள் பேசிய எதனாலும் நான் கோபப்படவில்லை, எதிர்த்துப் பதில் பேசவும் இல்லை.......”

“அறியாமை, பணத்தாசை, பொறாமை மூன்றும் ஒன்று சேர்ந்து விட்டால் அப்புறம் உண்மையைக் கண்களிலிருந்து, மறைப்பதற்கு வேறு எதுவுமே தேவையில்லை.”

“இத்தனை பெரிய காரண காரியங்களும் விளக்கங்களும் கூடத் தேவை இல்லை. முத்தக்காளைப் போலக் கணவனை.