பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

சாயங்கால மேகங்கள்

ராட்சத ராட்டினம் இரண்டாவது முறை நாலைந்து சுற்றுக்கள் வேகமாகச் சுற்றுவதற்குள்ளேயே சித்ராவுக்குத் தலைசுற்றத் தொடங்கிக் கண்களில் நீர் துளித்துவிட்டது. அவள் நழுவி விழுந்து விடாமல் பூமி தாங்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. மூன்றாவது முறை சுற்றத் தொடங்குவதற்கு முன்பே பூமி அவளோடு அவசர அவசரமாக கீழே இறங்கி விட்டான். சித்ரா குழந்தைத்தனமாக உடனே பூமியை ஒரு கேள்வி கேட்டாள்:

“தலை சுற்றாமல் மயக்கமோ வாந்தியோ வராமல், உங்களால் இந்த வேகத்தை எப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடிகிறதோ?”

“என்னைப் பொறுத்தவரை இந்த வேகம் என் இயல்பு. வேகமும் சுறுசுறுப்பும் இல்லாவிட்டால் குங்ஃபூ, கராத்தே, ஜூடோ எதிலுமே நான் தேர்ந்திருக்க முடியாது. என்போல் வேகமும் தீவிரமும் உள்ளவர்கள் குறைவாகவும் மந்த புத்தியும் பயமும் கோழைத்தனமும் உள்ளவர்கள் அதிகமாகவும் உள்ள தேசத்தில் அவர்களை விட இன்று என் போன்றவர்கள்தான் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது.”

பூமியின் கோபமும் குமுறலும் இன்னும் தணியவில்லை என்பதையே அவனுடைய சொற்கள் காட்டின், அவனே தொடர்ந்தான்:

“வெறும் நொண்டிகளை வைத்து ஓட்டப் பந்தயம் நடத்திக் காட்டி வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிய நான்தான் முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்......”

“விட்டுத் தள்ளுங்கள் வேறு எதையாவது. பேசலாம். திரும்பத் திரும்ப இப்படி நினைத்து வருந்துவதற்குக்கூட இவர்கள் தகுந்தவர்கள் இல்லை.”

எட்டுத், திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத் தன்மை தொடரும்."