பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சாயங்கால மேகங்கள்

"பகல்லே ‘ஸ்லோஸ்பீட்’ அட்ஜஸ்மெண்ட் சரியில்லே... சரி பார்த்தப்புறம் இப்ப தேவலாம்"என்று சொல்லி வசூல் கணக்கு பண விவகாரங்களை ஒப்படைத்த குமாரிடம் அந்த அகால வேளையில் பூமிக்குப் பேச ஏதுமிருக்கவில்லை.

பூமியைப் பொறுத்தவரை மறுநாள் என்பது அடுத்த ஒன்றரை மணி நேரத்திலேயே பிறந்துவிட்டது. மூன்றரை மணிக்கு எழுந்ததிலிருந்து வழக்கமான தேகப்பயிற்சி, யோகாசனம் எல்லாம் முடிந்து அவன் தன் ஆட்டோவை மயிலாப்பூரிலிருந்து கிளம்பியபோது மணி நாலரைகூட ஆகியிருக்க வில்லை.

சென்ட்ரலில் ஏர்க்காடு எக்ஸ்பிரஸ் லேட் ஆகாமல் சரியான நேரத்துக்கு வந்தால் 4-45க்கு வந்துவிடும்.

இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அஜந்தா ஹோட்டல் எதிரே அப்போதுதான் திறந்து ஐயப்பன் படத்துக்குச் சாம்பிராணிப் புகை காட்டிக்கொண்டிருந்த ஒரு மலையாளி டீக் கடையின் முன் ஆட்டோவை நிறுத்தி டீ குடித்தான் பூமி.

அப்புறம் சரியாக நாலு நாற்பதுக்கு அவன் சென்ட்ரலில் இருந்தான். ஏர்க்காடு எக்ஸ்பிரஸ் சரியான நேரத்துக்கு வந்தது. கணவனும் மனைவியுமாக் ஒரு கைக்குழந்தையுடன் அதிகம் மூட்டை முடிச்சு இல்லாமல் ஒரு சவாரி கிடைத்தது.

“எங்கே சார் போகவேண்டும்?”

பூமியின் பேச்சுத் தமிழ் காரணமாகச் சென்னை ஆட்டோ டிரைவர்கள் பேசும். கொச்சையிலிருந்து விடுபட்டுச் சற்றே மெருகேறியதாக இருப்பதை வியந்துகொண்டே, ‘பாலாஜி நகர்’ என்று பதில் சொன்னார். ஏர்க்காடு எக்ஸ்பிரஸில் வந்தவர். உடனே அவர் மனைவி குறுக்கிட்டு, “சித்ரா இத்தனை . சீக்கிரம் எங்கே எழுந்திருக்கப் போற?... முதல்லே மயிலாப்பூர் போயிட்டு அப்புறம் வேணாப்போயி அவளைப் பார்க்கலாமா?...” என்றாள்.

“இல்லே! நாம் ஏர்க்காட்டில் வர்ரது சித்ராவுக்குத் தெரியும்...” என்று மனைவிக்குச் சொல்லிவிட்டுப் பூமியின்