பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சாயங்கால மேகங்கள்

புரட்சிமித்திரனைப் போன்ற தளுக்குப் பேர்வழிகள் இப்படி விசாரிப்பது பற்றிய போலித்தனமே பூமிக்குக் கோப மூட்டியது.

ஒரு தீவிரமான புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் முன்வை அதற்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் புரட்சியைப் பற்றி வரட்டுப் பிரசங்கம் பண்ணிக் கொண்டு நிற்கிறவனை முதலில் ஒழிக்க வேண்டும். புரட்சிமித்திரனும் அப்படிப்பட்டவர்களில் ஒருவனாகவே பூமிக்குத் தோன்றினான்.

“இன்றைய கவிதைகளை வெறும் காகிதங்களில் எழுத முடியாது. வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞனின் கண்ணிரையும், வரதட்சிணைக் கொடுமையால் கன்னி கழியாமலே நிற்கும் பெண்ணின் துயரத்தையும் உழைப்பவர்களின் சிரமங்களையும் சேர்த்துப் பார்த்தலே இன்றைய கவிதை எனக்குப் படிக்கக் கிடைத்து விடும்! அதைவிட அதிகமாக எதை உமது இதழ்களில் நான் படிக்கப் போகிறேன்?”

“அப்படியில்லை! என் இதழ்களை நீங்கள் படித்தே ஆக வேண்டும். இதோ அடுத்த இதழுக்காகவே, தயாரிப்புச் செலவுக்குப் பணம் எடுத்துக் கொண்டு போகிறேன்.”

“எதற்குப் பணத்தை வீணாக்குகிறீர்கள்? புசித்தவர்களுக்கு ஏட்டுச் சுரைக்காயாக வழங்குவதைவிடப் பணமாகவே கொடுத்துவிடலாம்.”

“சரி! அதிருக்கட்டும்! சித்ராவைச் சமீபத்தில் பார்த்தீங்களா?”

“ஏன்? சற்று முன்பு கூடப் பார்த்தேன். காலையிலிருந்து இதுவரை என்னோடு பேசிக் கொண்டிருந்து விட்டுச் சிறிது நேரத்துக்கு முன்புதான் பள்ளிக்குப் புறப்பட்டுப் போகிறாள்.”

இதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் ஒரு தினுசாகப் பூமியை முறைத்துப் பார்த்து விட்டுப் போய்ச் சேர்ந்தான். புரட்சிமித்திரன். பூமி பாங்குக்குள் சென்றான். தன் கணக்கிலிருந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தான்.