பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

சாயங்கால மேகங்கள்

அந்தப் பெரிய நகரில் அதிகாரத்திற்கும் மிரட்டலுக்கும் முன்னால் எல்லாருமே முத்தக்காளைப் போல அநாதரவான விதைகள் ஆகி விடுகிறார்களோ என்று சந்தேகமாக இருந்தது அவனுக்கு. கணவனை இழக்கிறவள் போல் தன் மானத்தை இழக்கிறவனும் ஒருவிதத்தில் விதவைதானே என்று எண்ணினான் அவன்.


17

இரத்தத் திமிரைக் காட்டுவதற்காக உடல் வலிமையைப் பயன்படுத்துவது வன்முறை. நியாயமான காரணத்துக்காகப் பயன்படுத்துவது தற்காப்பு.


சித்ரா அவனுடைய அந்தத் தன்மான உணர்வை மிகவும் இரசித்தாள். தீமைக்கும் அநீதிக்கும் அடங்காத மடங்காத அந்தக் கம்பீரமான ஆண்மை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அவள் விரும்பினாள்.

தான் எப்படி மற்றவர்களிடம் நியாயமாக நடந்து கொண்டானோ அப்படி மற்றவர்களும் தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தான் பூமி. ஆனால் பல சமயங்களில் பல நியாயங்கள் ஒரு வழிப்பாதையாகவே இருந்தன. உடல் வலிமையாலும், மன வலிமையாலும் சேர்த்தே தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் எதிர்த்தான் பூமி.

அதனால் முத்தக்காள் மெஸ்ஸின் வளர்ச்சிக்கு ஏற்பட இருந்த பல இடையூறுகள் தவிர்க்கப்பட்டன. அந்த மெஸ்ஸுக்கு அவன் ஒரு பாதுகாப்பாக இருந்தான். அது பல படிகள் மேலே வளரக் காரணமாயிருந்தான்.