பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சாயங்கால மேகங்கள்

"அதுக்கில்லே! இது மாதக் கடைசியோன்னு கவலை வேணாம். சவாரி எப்பப் போனாலும் கிடைக்கும். அவசரம் தேவையில்லை.”

“அவசரம் வேறு, சுறுசுறுப்பு வேறு. சுறுசுறுப்பை அவசரம் என்று புரிந்து கொள்வதும் அவசரத்தைச் சுறுசுறுப்பு என்று புரிந்து கொள்வதும் சரியில்லை...”

“சரிதானப்பா... குமார் நைட் சவாரிக்காகப் புகாரியண்டே போயிருக்கான்... ஸெகண்ட் ஷோ சவாரி முடிஞ்சதும் வண்டியை இங்கே வூட்டாண்டே இட்டாந்து விட்டுடச் சொல்றேன்.”

இதைக் சொல்லிவிட்டுக் கன்னையன் புறப்பட்டுப் போய் விட்டான். பூமி மறுநாள் சவாரிக்குப் போக வேண்டும் என்ற ஞாபகத்தோடு ஏற்கெனவே சலவைக்குப் போட்டு வைத்திருந்த காக்கி யூனிஃபாரம் இருக்கிறதா என்று துணி அலமாரியில் தேடிப் பார்த்து அதை எடுத்து வைத்தான். படிக்கப் பயன்படும் புத்தகங்கள் சிலவற்றையும் அந்த உடைகளோடு அருகிலேயே எடுத்து வைத்த பின், லஸ் முனைக்குச் சென்று இரவு உணவை முடித்து வரப் புறப்பட்டான். வெளியே முகப்பில் போர்டு விளம்பரம் எதுவும் இல்லாமல் ‘மெஸ்’ மாதிரி நடத்தப்பட்டு வந்த அந்த உணவு விடுதியில் எப்போதும் அதிகக் கூட்டம் இராது. இருநூறு முந்நூறு வாடிக்கைக்காரர்களும், மிகச்சில புதியவர்களும் உண்ணவருகிற இடமாக் இருந்தது அது.

கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அதே போன்ற நிராதரவான பெண்கள் சிலரையும் வேறு உதவியாட்களையும் வைத்துக்கொண்டு அந்த மெஸ்ஸை நடத்தி வந்தாள். பூமியைப் போன்ற ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களும், வேறு பலரும் அந்த மெஸ்ஸை ஆதரித்து வந்தார்கள்.

மயிலாப்பூர் வட்டாரத்தில் சாதாரண டாக்ஸி டிரைவராக வாழ்வைத் தொடங்கிப் பின் உழைப்பால் முன்னேறிச் சொந்-