பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அணிந்துரை


மு.அறிவானந்தம் அவர்கள் மணவையாரின் ஆய்வுகளில் ஆழங்கால்பட்டவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

படைப்பிலக்கியவாதிகள் பலர் மொழிபெயர்ப்புப் பணியினை இரண்டாம் தர வேலையாக கருதி வருகிற இந்நாளில், இப்பணியினைத் தமது மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றுகிற அளப்பரிய சேவை என்கிற அளவிலே மணவையார் செய்துவருகிறார் என்பதை திருமிகு அமுதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ் வளர்ச்சியில் 'கூரியர்' பங்கு என்கிற திரு இரா.நடராசன் அவர்களின் கட்டுரை கருதத்தக்க ஒன்று. 'கூரியர்' வாழ்வில் அது தொடர்ந்து நடைபோட நானும் நாடாளுமன்றில் ஆற்றிய பணி ஒரு காரணம் என்பதை மணவையாரே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நிகழ்காலத்தில் விழுதுகளைப் பரப்பி, எந்தக் காற்றுக்கும் அசையாமல் நிற்கிற ஆலமரத்தைப் போல அமைதிப்பணி ஆற்றிவருகிற மணவையார் அவர்கள் சிம்மாசனத்திற்கே தகுதி ஆனவர்கள்; சின்ன நாற்காலிதான் தமிழர்கள் இப்போது தந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை கைகால் முளைத்த கனிந்த விந்தைக்கு இன்னொரு பெயர்தான் மணவை முஸ்தபா. அவரைப் பற்றி நூலே எழுத வேண்டிய எனக்கு இப்போது அணிந்துரை வழங்கத்தான் அவகாசம் இருக்கிறது.

"மணவையார் - அறிவியல் தமிழின் விடிவெள்ளி" என்கிற அறிவாளர் ராமசாமி அவர்களின் தொகுப்பு தமிழர் இல்லம் தோறும் இடம்பெற வேண்டிய தகுதிமிக்க இதயம் போன்ற நூல்.

சென்னை
15.9.98

ஞானபாரதி
வலம்புரிஜான்