பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

பல்லவர் வரலாறு



இருந்தமை அறியற்பாலது. கூரம்காசக் குடிப்பட்டயங்களில் நந்தி மீது லிங்கம் அமைந்திருத்தல் இம் முடிபை நன்கு வலியுறுத்துவதாகும். எனவே, தனிப்பட்ட அரசன் எச்சமயத்தவன் ஆயினும், பல்லவர் ஆட்சியில் சைவமே அரசியல் சமயமாக இருந்தது என்பது இதுகாறும் கூறிய குறிப்புகளால் நன்கு புலனாகும்.

‘விடேல் விடுகு’ என்பது பல்லவர் விருதுப் பெயர்களுள் ஒன்று எனத் தவறாகக் கருதிய ஆராய்ச்சியாளர் பலர் ஆவர். இது ‘விடை+வெல்+விடுகு’ என்றிருத்தலே சிறப்புடையது. இதன் பொருள், ‘வெற்றியுடைய நந்தி இலச்சினையோடு விடுதல் பெற்ற (விடப்பெற்ற) ஆணை’ என்பதாகும். இப் பொருள் சரியா என்பது ஆராயத்தக்கது.[1]

பல்லவரது கத்வாங்கம்

‘கத்வாங்கம்’ என்பது சிவன் கொண்ட படைகளில் ஒன்றாகும். இதனாற்றான் சிவபெருமான் ‘கத்வாங்கன், கத்வாங்கதரன்’ என்றெல்லாம் கூறப்பட்டுள்ளான்.[2] இக் கத்வாங்கப் படையைப் பிற்காலப் பல்லவர் தம் சமய அடையாளமாகக் கொண்டிருந்தனர்.[3] முதலாம் பரமேசுவரவர்மன் கத்வாங்கத்தைக் கொடியிலே பெற்றவன் என்பது காசக்குடிப் பட்டயம் கூறுகின்றது. இரண்டாம் நந்திவர்மன் பட்டமேற்றபோது அவனுக்குக் கொடுக்கப்பட்ட பலவகைப் படைகளில் கத்வாங்கமும் ஒன்று என்று வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.[4]

அமைச்சியல்

சிவஸ்கந்தவர்மன் வெளியிட்ட ஹிரஹத கல்லிப் பட்டயத்தில் ஆமாத்யர் (அமைச்சர்) கூறப்பட்டுள்ளனர்.[5] பிற்காலப் பல்லவருள்


  1. Dr. C.Minakshi’s “Administration and social Life under the Pallavas’ pp.42, 43, 44.
  2. அப்பர் தேவாரம், ஐந்தாந்திருமுறை ()
  3. S.I.I Vol. II p.357
  4. S.I.I. Vol, IV, No.135.
  5. Ep.Indica Vol.II, p.5.