'பாட்டுக்கொரு புலவன் பாரதி' 35
என்று கூறித் தம் தமிழ் நாட்டன்பினைப் புலப்படுத்துகிறார்.
இன்று அரசியலில் பெரிதும் பேசப்படுகின்ற ஒருமைப்பாட்டினை அன்றே இலக்கியத்தில் எழுதிச் சென்றவர் பாரதியார், 'ஒரே உலகம்' (One World) என்னும் நூலை இயற்றிய 'வெண்டல் வில்கி’ என்னும் அமெரிக்க எழுத்தாளருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்கத் தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனர், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று உலக ஒருமைப்பாட்டினை—உலக மாந்தர் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்கிற கருத்தினை உலகுக்கு உணர்த்திச் சென்றார்.
பாரதியார் சாதி மதங்களைப் பாராது, வேதியரும் வேறு குலத்தவரும் ஒருமித்து இணைந்து வாழும் வாழ்வினை வற்புறுத்தி,
'எப்பதம் வாய்த்திடு மேனும்—நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொது வாகும்;
முப்பது கோடியும் வாழ்வோம்!—வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்!’
—வந்தே மாதரம்: 5
என்று ஆவேசக் குரலில் ஒற்றுமையினை முரசறைந்து மொழிகின்றார். மேலும் அவர்,
'‘முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள்—இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள்எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்!'
—எங்கள் தாய்: 3
என்று பல்வேறு மொழி பேசும் பாரதநாட்டு மக்களின் ஒற்றுமைப்போக்கினை உணர்த்தி, பாரதத்தின் தென்கோடிச் சேரநாட்டு இளமகளிரோடு வடக்கே சிந்து நதியின்மிசை நிலவினில் சுந்தரத் தெலுங்கினில்