'பாட்டுக்கொரு புலவன் பாரதி' 33
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ்நாடு"
—செந்தமிழ் நாடு: 7
என்றும் வரும் பாடல்களில் பாரதியார் தமிழ்க் கவிஞர் மூவர்பாலும் கொண்டிருந்த அளவிலா மதிப்புப் புலனாகின்றது.
இவ்வாறு தமிழைப் பாராட்டும் பாரதியார், 'தமிழ் தன் பழமைச் சிறப்போடு புதுமைநெறியிலும் புகுந்து திளைத்து எவ்வாறு பொலிவுறுதல் வேண்டும்' என்பதனையும் குறிப்பிடுகின்றார்; 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லிப் பெருமை பாராட்டிக் கொள்ளாமல், வெளிநாட்டார் வணக்கம் செலுத்தும் வண்ணம், திறமான புலமை தமிழ்மொழியில் வீறிடுதல் வேண்டும்', என்று வற்புறுத்துகின்றார்; மேலும், நாளுக்கு நாள் விரைந்து முன்னேறி வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுவரும் விஞ்ஞான சாத்திரத்தின் விந்தைமிகு நூல்கள் எல்லாம் தமிழில் துலங்க வேண்டும் என்றும், தமிழால் நுட்பமான எந்தக் கருத்தினையும் எளிதில் கூற இயலும் என்றும் கூறி, 'எட்டுத்திக்கும் சென்று அரிய கலைச்செல்வங்களைக் கொண்டு வந்து குவிக்க வேண்டும்”, என்கிறார்.
பாரதியாரின் தமிழ் மொழி வாழ்த்துப்பாடல் தலையாய கருத்துடையதாகும். வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி’, வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழியாய் வாழவேண்டும் என்கிறார் பாரதியார்.
மொழிப் பற்றினைக் கூறும் பாரதியார், நாட்டுப் பற்றினை முதலாவதாக வற்புறுத்தியுள்ளார்; 'வந்தே மாதரம்' என்று மாநிலத்தாயை வணங்கிப் பாரத நாட்டைப் புகழ்ந்து பாடுகின்றார். முன்னோர் வழிவழி வாழ்ந்த நாட்டின் நிலையினைச் செம்மாப்போடு எண்ணிப் பார்க்கிறார் கவிஞர்.
வா.—3