திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 49 முதல் 50 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்" - எசாயா 49:15.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 49 முதல் 50 வரை

அதிகாரம் 49[தொகு]

மக்களினங்களுக்கு ஒளி இஸ்ரயேல்[தொகு]


1 தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்;
தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்;
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்;
என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். [1]


2 என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்;
தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்;
என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்;
தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக் கொண்டார். [2]


3 அவர் என்னிடம்,
'நீயே என் ஊழியன், இஸ்ரயேலே!
உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார்.


4 நானோ, 'வீணாக நான் உழைத்தேன்;
வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்;
ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது;
என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன்.


5 யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும்,
சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும்
கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத்
தம் ஊழியனாக உருவாக்கினார்;
ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்;
என் கடவுளே என் ஆற்றல்;
அவர் இப்பொழுது உரைக்கிறார்:


6 அவர் கூறுவது:
யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும்
இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும்
நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ?
உலகம் முழுவதும் மீட்பை அடைதற்கு
நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன். [3]


7 மனிதரிடையே பெரிதும் இகழப்பட்டவரும்
நாடுகளிடையே வெறுத்தொதுக்கப்பட்டவரும்
ஆட்சியாளர்களின் பணியாளருமானவருக்கு
இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
"உண்மையுள்ள ஆண்டவரை முன்னிட்டும்
உம்மைத் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும்
அரசர்கள் உம்மைக் கண்டு எழுந்து நிற்பர்;
தலைவர்கள் உம்முன் தலை வணங்குவர்."

எருசலேம் மீட்கப்படுதல்[தொகு]


8 ஆண்டவர் கூறுவது இதுவே:
தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்;
விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்;
நாட்டை மீண்டும் நிலைநாட்டவும்
பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும்
நான் உம்மைப் பாதுகாத்து
மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன். [4]


9 சிறைப்பட்டோரிடம், 'புறப்படுங்கள்' என்றும்
இருளில் இருப்போரிடம் 'வெளிப்படுங்கள்' என்றும் சொல்வீர்கள்.
பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்;
வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர்.


10 அவர்கள் பசியடையார்; தாகமுறார்;
வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை.
ஏனெனில் அவர்கள்மேல் கருணை காட்டுபவர்
அவர்களை நடத்திச் செல்வார்;
அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். [5]


11 என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்;
என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.


12 இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்;
சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும்
சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள்.


13 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்;
மண்ணுலகே, களிகூரு;
மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்;
ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்;
சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.


14 சீயோனோ, 'ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்;
என் தலைவர் என்னை மறந்து விட்டார்' என்கிறாள்.


15 பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ?
கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ?
இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.


16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்.
உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.


17 உன் பிள்ளைகள் விரைந்து வருவர்;
உன்னை அழித்துப் பாழாக்கியோரும்
உன்னை விட்டுப் போய்விடுவர்.


18 உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்;
அவர்கள் அனைவரும் உன்னிடம் ஒருங்கே வருகின்றனர்;
என் உயிர்மேல் ஆணை!
நீ அவர்கள் அனைவரையும் அணிகலன்போல் அணிந்துகொள்வாய்;
மணப்பெண் அணிவதுபோல் அணிந்துகொள்வாய், என்கிறார் ஆண்டவர்.


19 பாழடைந்து, அழிந்து, மண் மேடாய்ப் போன உன் நாட்டின் பகுதிகள்
இப்பொழுது மக்கள் குடியிருப்பதற்கு மிகவும் குறுகியதாயிருக்கும்;
முன்பு உன்னை விழுங்கியவர்
உன்னைவிட்டு வெகு தொலைவுக்குச் செல்வர்.


20 உன் துக்க காலத்தில் பிறந்த உன் பிள்ளைகள் உன் செவிகளில்
'இந்த இடம் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது;
நாங்கள் குடியிருக்கப் போதிய இடம் தாரும்' என்பர்.


21 அப்போது நீ, 'இவர்களை எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்?
நான் பிரிவுத் துயரால் வாடினேன்!
மலடியாய் இருந்தேன்!
நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்!
அப்படியிருக்க இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்?
நான் தன்னந்தனியளாய் விடப்பட்டிருக்க,
எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?' என்று
உன் உள்ளத்தில் சொல்லிக் கொள்வாய்.


22 என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
வேற்றினத்தாருக்கு நேராக என் கையை உயர்த்துவேன்;
மக்களினங்களை நோக்கி என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்;
அவர்கள் உன் புதல்வரை மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்;
உன் புதல்வியரைத் தம் தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர்.


23 அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர் ஆவர்;
அவர்கள் அரசியர் உங்கள் செவிலித் தாயர் ஆவர்;
முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அவர்கள் உன்னை வணங்குவர்;
உன் காலடிப் புழுதியை நக்குவர்;
நானே ஆண்டவர் என்பதையும்,
எனக்காகக் காத்திருப்போர் வெட்கமடையார் என்பதையும்
அப்பொழுது நீ அறிந்து கொள்வாய்.


24 வலியோனின் கையினின்று,
கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா?
வெற்றி வீரனிடமிருந்து, சிறைப்பட்டோர் தப்ப இயலுமா?


25 ஆண்டவர் கூறுவது இதுவே:
சிறைப்பட்டோர் வலியோனிடம் இருந்து விடுவிக்கப்படுவர்;
கொள்ளைப்பொருள் கொடியவன் கையினின்று மீட்கப்படும்;
உன்னை எதிர்த்துப் போராடுபவருடன் நானும் போராடுவேன்;
உன் பிள்ளைகளை விடுவிப்பேன்.


26 உன்னை ஒடுக்குவோர் தங்கள் சதையை உண்ணச்செய்வேன்;
அவ்வாறு தங்கள் இரத்தத்தை இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்;
அப்பொழுது மானிடர் யாவரும்,
நானே ஆண்டவர், உன் விடுதலையாளர்,
உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர், என்று அறிந்துகொள்வர்.


குறிப்புகள்

[1] 49:1 = எரே 1:5.
[2] 49:2 = எபி 4:12; திவெ 1:16.
[3] 49:6 = எசா 42:6; லூக் 2:32; திப 13:47; 26:23.
[4] 49:8 = 2 கொரி 6:2.
[5] 49:10 = திவெ 7:16-17.


அதிகாரம் 50[தொகு]


1 ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் தாயைத் தள்ளி வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே?
உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்?
இதோ, உங்கள் தீச்செயல்களை முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்;
உங்கள் வன்செயல்களின் பொருட்டே உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.


2 நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன்?
நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன்?
உங்களை மீட்க இயலாதவாறு என் கை சிறுத்துவிட்டதோ?
விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ?
இதோ என் கடிந்துரையால் கடல்தனை வற்றச் செய்கிறேன்;
ஆறுகளைப் பாலையாக்குகிறேன்;
அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன; தாகத்தால் சாகின்றன.


3 வான்வெளியைக் காரிருளால் உடுத்துவிக்கின்றேன்;
அதனைச் சாக்கு உடையால் போர்த்துகின்றேன்.

ஆண்டவர்தம் ஊழியரின் ஒப்படைப்பு[தொகு]


4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட,
ஆண்டவராகிய என் தலைவர்,
கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்;
காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்;
கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.


5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்;
நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை.


6 அடிப்போர்க்கு என் முதுகையும்,
தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.
நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும்
என் முகத்தை மறைக்கவில்லை. [1]


7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்;
நான் அவமானம் அடையேன்;
என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்;
இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.


8 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்;
என்னோடு வழக்காடுபவன் எவன்?
நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்;
என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும்.


9 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்;
நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?
அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்;
புழுக்கள் அவர்களை அரித்துவிடும். [2]


10 உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து
அவர்தம் அடியானின் சொல்லுக்குச் செவிசாய்ப்பவன் எவன்?
அவன் ஒளிபெற இயலா நிலையில் இருளில் நடந்துவருபவன்;
ஆண்டவரின் பெயர்மீது நம்பிக்கை கொண்டு
தன் கடவுளைச் சார்ந்து கொள்பவன்.


11 ஆனால், நெருப்பு மூட்டித் தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே,
நீங்கள் அனைவரும் உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும்,
நீங்கள் மூட்டிய தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்;
என் கையினின்று உங்களுக்குக் கிடைப்பது இதுவே:
நீங்கள் வேதனையின் நடுவே உழன்று கிடப்பீர்கள்.


குறிப்புகள்

[1] 50:6 = மத் 26:67; மாற் 14:65.
[2] 50:8-9 = உரோ 8:33-34.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 51 முதல் 52 வரை